Sunday, October 30, 2022

யாருக்காக எழுதுகிறது இந்து தமிழ் திசை?

யாருக்காக அபாண்டமாக வலிந்து எழுதுகிறது 'இந்து தமிழ் திசை' ஏடு?

கவிஞர் கலி. பூங்குன்றன்

வயிறு குலுங்கச் சிரியுங்கள்!

அண்ணா 1968 அக்டோபர் 3ஆம் தேதி திருத்தணி முருகனைத் தரிசித்தாராம்! உண்மை என்னவென்றால் அந்தக் கால கட்டத்தில் அண்ணா அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் என்பதுதான்.

'இந்து தமிழ் திசை' நாளேடு - 'தினமலர்' 'தினமணி'யோடு ஜோடி சேர்ந்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நடு நிலைபோல் நடித்துக் கொண்டிருந்த அதன் ஜிகினா வெளிறி விட்டது.

சில நாட்கள் முன் யாரோ ஒரு அநாமதேயத்தைத் தேடிப் பிடித்து தந்தை பெரியார் பற்றித் தப்பும் தவறுமாக உளறிக் கொட்டி கட்டுரையாக்கி மகிழ்ந்தது.

நேற்று வெளிவந்த ஏட்டிலும் (29.10.2021) "கடவுள் மறுப்பைக் கை விடுகிறதா திராவிட இயக்கம்?" எனும் தலைப்பில் தோழர் செல்வ புவியரசன் பொறுப்பு இல்லாமலும், ஆதாரமில் லாமலும் எழுதியிருப்பதைப் பார்க்கும் பொழுது, ஏதோ ஒரு திட்டத்தோடுதான் களத்தில் இறங்கியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

"கடவுள் மறுப்பைக் கைவிடுகிறதா திராவிட இயக்கம் என்ற கேள்வியைக் கேட்டு சகட்டு மேனியாகக் குற்றம்" சாட்டப்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்து தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சி என்ற நிலையில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்!' என்பதை கொள்கையாகக் கொண்டு விட்டது. மதிமுக, அதிமுகவும் அந்த நிலைப்பாட்டில் உள்ளவைதான்.

இக்கட்சிகளில் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் உண்டு என்றாலும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது அக்கட்சிகளால் அறிவிக்கப்பட்ட ஒன்று.

இந்த நிலையை, வேறுபாட்டைக் கூடப் புரிந்து கொள்ளாமல் தோழர் புவியரசன் எழுதுவது  ஏற்புடையதுதானா?

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக உள்ள ஒரு சமூகப் புரட்சி இயக்கமாகும்.

சமூகப் புரட்சி இயக்கத்தையும், தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகளையும் சமப் பார்வையில் பார்ப்பது சரியான சறுக்கல் சிந்தனை.

அண்ணாவைப் பொறுத்தவரை கடவுள் மறுப்பாளர்தான். கலைஞர் அவர்களும் அந்த நிலையில் உள்ளவர்தான். பல தடவை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த தூத்துக்குடி துறைமுகத் திட்டம், அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் - சுமூகமான முடிவு எட்டப்பட்ட நிலையில்  ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜசாமி கோயிலுக்கு வருமாறு முதலமைச்சர் அண்ணாவை   அழைத்தார், ஆனால் தான் கோயிலுக்கு வருவதற்கில்லை, வேண்டுமானால் தன் குடும்பத்தில் ஒருவரை அனுப்புவதாகவும் அண்ணா கூறினார். இத்தகவலை ஒன்றிய அமைச்சரே செய்தியாளர்களிடம் கூறியதுதான் முக்கியம் ('விடுதலை' 20.9.1967).

இந்தநிலையில் திருத்தணி ஆலயத்தில் மலைப்பாதையைத் திறந்து வைக்கச் சென்றபோது முருகனைத் தரிசித்தார் அண்ணா என்பது எல்லாம் எத்தகைய அபாண்டம்!

இதில் வயிறு குலுங்கக் குலுங்க சிரிக்கும் ஓர் செய்தி உண்டு.

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது 1968 அக்டோபர் 3 அன்று திருத்தணி ஆலயத்தில் மலைப் பாதையைத் திறந்து வைக்கச் சென்றபோது முருகனைத் தரிசித்தார் என்று எழுதுகிறார் எழுத்தாளர் செல்வ புவியரசன்.

இதனைப் படிக்கும்பொழுது எவ்வளவு பொறுப்பு இல்லாமல் அபாண்டமாக எழுதுகிறார் ஒருவர் என்பதை அறிய முடிகிறது.

முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக 1968 செப்டம்பர் 10ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்று 1968 நவம்பர் 6ஆம் தேதிதான் சென்னை திரும்பினார் - இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் எழுத்தாணி பிடிக்கும் இவர்களை.

அமெரிக்காவிலிருந்து திருத்தணி முருகனை கும்பிட்டார் என்பார்களோ!

இன்னொரு நகைச்சுவை, சென்னையில் நடந்த மதிமுக மாநாட்டில் கி.வீரமணி முன்னிலையிலேயே வைகோ முன் வைத்த கருத்தை துரை. வையாபுரி முழக்கமாக்கியிருக்கிறார். ('பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும்" என்று துரை வைகோ கூறியதை வைத்துக் கொண்டே இப்படி எழுதுகிறார்).

எத்தனை மேடைகளில் ஏறினாலும் கி. வீரமணி கடவுள் மறுப்புக் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார். ஆனால் அன்று வைகோ பேசியதன் உட்கருத்தை கி. வீரமணி ஏற்றுக் கொண்டார் என்றே அவரது சமீபத்திய புத்தகத்துக்கு 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" என்ற  தலைப்பு வைத்ததிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது" என்கிறார் புவியரசன்.

அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. "மொட்டைத்  தலைக்கும் முழங்காலுக்கும் விளக்கெண்ணெயில் துவைத்த நூலால் முடிச்சுப் போடும்" பேதைமைதான் என்னே, என்னே.

'டிரோஜன்' குதிரை என்பதற்கு அந்நூலிலேயே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோமர் எழுதிய கிரேக்க இதிகாசமான இலியட் (Iliad) டில் டிராய்க் கோட்டைக்குள் கிரேக்கப் போர் வீரர்கள் ஒளிந்து கொண்டு நுழைவதற்காக உருவாக்கப்பட்ட குதிரை வடிவிலான பெரிய மரப் பொம்மை" என்று பாலபாடமாகச் சொல்லிக் கொடுத்த பிறகும் மக்குப் பிள்ளையாக ஏதோ கொள்கை தவறு நடந்து விட்டது என்று தர்க்கம் செய்ய ஆசைப்படலாமா?

ஒருக்கால் ஆர்.எஸ்.எஸை ஒரு தந்திரமான - சூழ்ச்சியான செயல்பாடு உடையது என்று கூறலாமா என்ற கோபத்தின் குடைச்சலில் எழுதப்பட்டதா?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாகக் கடைசியில் பெரியாரையும் கடிக்க ஆரம்பித்து விட்டது. 'தமிழ் இந்து'.

கடவுள் மறுப்பை ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்த பெரியாரும், அண்ணாவும் கூடத் தங்களது கொள்கையைக் குடும்பத்தினரிடத்தில் நடைமுறைப் படுத்த இயலாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். நாகம்மைக்கு முதல் குழந்தை பிறந்து இறந்த நிலையில் அடுத்த குழந்தைப் பேறுக்காக வேண்டிக் கொண்டு ராமேஸ்வரத்துக்கு அழைத்துப் போனதை பெரியார் பின்பு வானொலியில் பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்! என்கிறார் தமிழ் இந்துக் கட்டுரையாளர்.

"மொட்டைதாதன் குட்டையில் விழந்தான்" என்று போகிற போக்கில் எதையும் எழுதலாமா?

எந்தப் பேட்டியில் எப்பொழுது கூறினார் என்று சொல்வதுதான் அறிவு நாணயம்.

கோயிலுக்குச் செல்லும் நாகம்மையாரை பெரியார் எப்படி திருத்தினார் என்பதை அறியாப் பிள்ளைகளும் அறிவார்கள் - ஆனால் தோழர் புவிக்குத் தெரியவில்லை என்பதா - இதன் பின்னணியில் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் கெட்ட நோக்கம் உள்ளது என்று கருதுவதா?

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஒரு தரப்பினர் மட்டுமே முழுமையாகப் பின்பற்ற முடியும். அவர்களிலும் ஒரு பகுதியினரே அவரை அடி பிறழாது தொடர முடியும் என்று கூறி 'மங்களம்' பாடி கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.

கடவுளை மறுப்பதற்கு பகுத்தறிவுச் சிந்தனையும், துணிவும் தேவை. இதனைப் பெரும்பாலோர் ஏற்பர் என்று பெரியாரும் நம்பவில்லை. அதனாலே அந்தக் கொள்கை குறைபாடு உடையது என்று பொருள் அல்ல.

உண்மையைச் சொல்லப் போனால் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்பவர்கள்கூட உண்மையிலேயே நடைமுறையில் கடவுளை நம்புகிறார்களா? என்பதை சிந்தியுங்கள்!

கடவுள் பார்த்துக் கொள்வார் என்றால் கரோனா தடுப்பூசி ஏன்? சங்கராச்சாரியாரே சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனைக்குச் சென்றுதானே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார்.

புட்டபர்த்தி சாயிபாபா மாதக் கணக்கில் வைத்தியம் பார்த்துக் கொள்ளவில்லையா!

இந்த இரட்டை வாழ்க்கை இல்லாதவர்கள்தான் பெரியாரைப் பின்பற்றுபவர்கள். இதனை ஒரு பலகீனமானது என்றோ, வெற்றி பெற முடியாதது என்றோ எழுதுவது - கருதுவது எல்லாம் முதுகெலும்புள்ளவர்களின் செயலாக இருக்க முடியாது.

"மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அவரது மகன் துரை.வைகோவும் பெரியார் திடலுக்கு வந்த போது வைகோவுக்கு அருகில் கி. வீரமணியும், துரை வையாபுரிக்கு  அருகில் அன்பு ராஜும் நின்று கொண்டிருந்த காட்சியே வாரிசுகளைக் களத்தில் இறக்குவது குறித்த கேள்விக்குப் பதில் சொல்லி விட்டதாம்" - எழுதுகிறார் தோழர்.

திராவிடர் கழகத்தை வலிந்து தாக்கும் தரத்தைத் தன் தலைமேல் சுமந்து கொண்டுள்ளார் என்பதற்கு இது ஒன்றே போதும்.

தலைவர் வீரமணி அவர்களுக்குப் பக்கத்தில் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் நின்று கொண்டிருந்தாரே அது தோழர் புவியரசனுக்குத் தெரியாதோ! இதை மறைப்பதன் மூலம், எழுத்தாளரின் உள்நோக்கம் பளிச்சென்று புரிகிறது.

தோழர் அன்புராஜ் திராவிடர் கழகத்தின் மூன்று பொதுச் செயலாளர்களுள் ஒருவர். வைகோவும், அவரது மகனும் வந்த நேரத்தில் அவர் இருந்தார். அது குற்றமா? இருந்தாலும் அவர் எப்படி வரவேற்கலாம் என்கிறாரா?

தோழர் அன்புராஜ் அங்கு இல்லாதிருந்து, வேறு ஒரு கழகத் தோழர் இருந்திருந்தால் அவர்தான் தி.க.வின் அடுத்த தலைவர் என்பாரோ? இவர் யாருக்காக எழுதுகிறார்? இதனால் பயன் யாருக்கு? என்பது எளிதில் புரிந்து கொள்ளத்தக்கதே!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரைப் பற்றி ஒரே ஒரு வரி எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்த சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பற்றி கால் வரி கண்டித்து எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அதே நேரத்தில் அரசு நிகழ்ச்சியிலோ, கல்விக் கூடங்களின் நிகழ்ச்சியிலோ கடவுள் வாழ்த்துப் பாடப்படும் போது, தள்ளாத வயதிலும், தனியாக எழுந்து நிற்க முடியாத நிலையிலும் இரண்டு தோழர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு, கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி முடிக்கப்படும் வரை கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்த தலைவரின் பண்பாட்டின் உச்சத்தையும் இணைத்து எழுதுமா இவர்களின் எழுதுகோல்கள்?

என்ன செய்வது அனுமார்கள் இராமாயண காலத்திலிருந்தே  இருந்து தொலைக்கிறார்களே!

Wednesday, February 2, 2022

தனிமைப் படுத்தப்பட்ட பா.ம க

 ஜெயிக்கிற கட்சியாகப் பார்த்து தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து வந்த ராமதாசால் இந்த முறை திமுக கூட்டணிக்குள் நுழைய முடியவில்லை! பாமகவை உறுதியாக சேர்க்கமாட்டோம் என திமுக திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டது! 

பேச்சுவார்த்தைக்கு கூட தயாராக இல்லை என பாமகவிற்கு உணர்த்தப்பட்டுவிட்டது! இது எந்த தேர்தல் காலத்திலும் பாமக பார்த்திராத அதிர்ச்சியாகும்!

ராமதாஸ் நம் கூட்டணிக்கு வருவதால் பலன் கிடையாது என்பது மட்டுமல்ல, பாதகங்களும் அதிகம் என திமுக கணித்துள்ளதாம்! கடந்த பத்தாண்டுகளாக பாமக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணி தோற்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது!

அந்த அளவுக்கு சொந்த சாதியிலும் அவருக்கு எதிர்ப்பு தீயாக வளர்ந்துள்ளது! மற்ற சமூகங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!

ராமதாஸ் என்ற பிம்பம் இன்றைய தினம் சந்தர்ப்பவாத – பிழைப்புவாத - அரசியலின் அடையாளமாகிவிட்டது!

இந்தப் பின்னணியில் நாம் டாக்டர். ராமதாசின் அணுகுமுறைகளை பார்க்க வேண்டும்!

கட்சி ஆரம்பித்து 31 ஆண்டுகளுக்கு மேலாகிறது! எத்தனையோ,வெற்றிகளையும் மகுடங்களையும் பார்த்த கட்சி தான் பாமக! 1980 களின் மத்தியில் பாமக கருக்கொள்ளாத காலகட்டத்தில் – அது வன்னியர் சங்கமாக இருந்த நிலையில் - அவர்களின் சட்டமன்ற, பாராளுமன்ற புறக்கணிப்பு சுவரெழுத்து கோஷங்களைக் கண்டு ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்!

 பாராளுமன்றத்தை பன்றிகளின் தொழுவமாக சித்தரித்து சுவரெழுத்துச் சித்திரங்கள் தீட்டிய அவர்கள் வெகு சீக்கிரமாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவதாரமெடுத்து, 1989 தேர்தலில் நின்று 15 லட்சத்து சொச்சம் ஓட்டுகள் பெற்றதும், 1991 தேர்தலில் போட்டியிட்டு, அந்தக் கட்சியின் சார்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் யானை மீதேறி சட்டமன்றம் வந்ததும் வரலாறு!

அன்றைய தினம் பாமகவிற்கு ஒரு இடதுசாரி முற்போக்கு முகம் இருந்தது. அதனால் அதை வலுப்படுத்த பல முற்போக்கு அறிவுஜீவிகள் களம் கண்டனர்! அந்த களத்தில் நான் அன்று மிகவும் மதித்த தோழர்கள் அ.மார்க்ஸ்,பிரபஞ்சன்,வள்ளி நாயகம்,அரணமுறுவல்,பேராசிரியர். மூர்த்தி, பார்த்தசாரதி....உள்ளிட்ட பெரிய அறிவுஜீவிகள் படையே அவருக்கு இருந்தது! 1989 ல் இண்டியா டுடே மற்றும் நியூஸ் டைம்ஸ் அசைண்மெண்டுக்காக அவர்களுடன் திண்டிவனம் சென்று டாக்டர் ராமதாசைப் பார்த்த போது, பத்துக்கு பத்தடியுள்ள ஒரு கிளினிக்கில் டாக்டராக அமர்ந்து அவர் ஏழை,எளிய மக்களுக்கு சிகிச்சை தந்ததையும், அவரது வெளிப்படையான பேச்சுக்களையும் பார்த்து வியப்படைந்தேன்!

பொங்கு தமிழ் இன்னிசைப் பெருவிழா என அவர் நடத்தி, தமிழிசைக்கும்,தமிழ் மரபின் தொடர்ச்சிக்கும் ஆற்றிய அரிய பங்களிப்புகளை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! செட்டி நாட்டு பாரம்பரியத்தில் வந்த பழ.கருப்பையா ராமதாசின் தலைமையேற்று பாமகவில் இணைந்தெல்லாம் வரலாறு!

அன்று அவர் வன்னியர் தலைவராக அறியப்பட்டிருந்தாலும் கூட, தமிழர் தலைவராக மதிக்கப்பட்டார்! காரணம், சமூகம் என்பது சாதிகளின் கலவையாகும்! சாதிகளுக்கு இடையில் இணக்கம் நிலவினால் தான் சமூக நல்லிணக்கம் என்பதும் சாத்தியப்படும்! ஒருவர் தன் சாதி மீது பற்றுள்ளவராக இருப்பது குற்றமல்ல, ஆனால், அதற்காக மற்ற சாதிகளின் வெறுப்பை சந்திப்பதாக அது அமைந்துவிடக் கூடாது என்ற புரிதல் கொண்ட பெருந்தகையாளராக அன்று ராமதாஸ் அறியப்பட்டார்! இது வெறும் வார்த்தையல்ல, சத்தியம்!

1987 ல் நடைபெற்ற மாபெரும் சாலைமறியல் போராட்டத்திற்குப் பிறகு 1989ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஆட்சி, வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20% ஒதுக்கியதே ராமதாசின் மாபெரும் வெற்றியாகும்! ஆனால், இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்; டாக்டர்.ராமதாசின் வெற்றி என்பது அவரது தனி வெற்றியல்ல! அவரது சமூகத்தில் அவருக்கும் முன்பே வன்னிய சமூகத்தை அரசியல்மயப்படுத்தவும்,சமூக தளங்களில் முன்னேற்றவும் ராமசாமி படையாட்சி, ஏ.கோவிந்தசாமி, ஏ.கே.நடராஜன் போன்றவர்கள் ஏற்படுத்தியிருந்த விழிப்புணர்வைத் தான் இவர் ஒன்றுபடுத்தி வெற்றி கண்டார் என்பதை புறக்கணித்துவிடக் கூடாது!


ஆனால்,அதற்குப் பிறகு இந்த வெற்றிக் கனியை வன்னிய ஏழை,எளிய மக்கள் சுவைத்துப் பயன்பெற அவர் எந்த முயற்சியிலாவது ஆக்கபூர்வமாக ஈடுபட்டாரா..? என்றால் இல்லை!

தமிழகத்தில் மிகச் சிறுபான்மையாக இருக்கக் கூடிய செளராஷ்டிரா சமூகத்தினர் கூட பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறந்து அந்த சமூகத்தினர் முன்னேறப் பாடுபடுகின்றனர்! ஆனால் கல்வி வணிகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் தன் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள்,கல்லூரிகள் சிறப்பாக செயல்படவோ, அதன் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமையின் அவலத்தை சுட்டிக்காட்டி அவற்றை காப்பாற்றவோ கூட ராமதாஸ் செயல்படவில்லை! 

பாமக தொடங்கப் பெற்ற பிறகான கடந்த 30 ஆண்டுகளில் வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் இழுத்து மூடப்பட்ட தகவல்களாவது டாக்டர்.ராமதாசுக்கு தெரியுமா? தெரியவில்லை!

அவர் தலையெடுப்பதற்கு முன்பே, வன்னிய குலஷத்திரிய மகா சங்கம் என்ற ஒன்று அந்த சமூகத்திற்கு செய்து வந்த கல்விப் பணிகளை அவர் அறியாமல் இருக்க முடியாது! அந்த சங்கத்தின் கேட்பாரற்ற பெரும் சொத்துகளை தன் வசப்படுத்திய ராமதாஸ் அதன் பிறகு செய்தது என்ன? வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கடளை ஆரம்பித்த பொழுது அதற்கு லட்ச,லட்சமாக நன்கொடை கொடுத்த வன்னியப் பெருங்குடி மக்கள் எதற்காக கொட்டிக் கொடுத்தனர்? அதன் மூலம் எத்தனை பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு எத்தனை லட்சம் ஏழை,எளிய பிள்ளைகள் தரமான கல்வி கற்றார்கள்..? ராமதாஸ் மனது வைத்திருந்தால் வட மாவட்டங்கள் முழுக்க பள்ளி,கல்லூரிகள் எனப்படும் கல்வி திருக்கோயில்கள் எழுந்திருக்குமே..!

 அவர் அதற்கு சொந்தப் பைசா கூட செலவழிக்காமல் கொட்டும் நிதியைக் கொண்டு செய்திருக்கலாமே..ஏன் செய்யவில்லை? வன்னியர்கள் கல்வி விழிப்புணர்வும், அதன் மூலம் வேலைவாய்ப்பு என்ற பொருளாதார வாய்ப்புகளும் பெற்றுவிட்டால் தனக்கு அடி பணிந்துவேலை பார்க்க ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற அச்சம் தானே! 

வன்னியர்களைவிட பின்தங்கிய நாடார் சமூகத்தினர் ஊருக்கு,ஊர் கல்விக் கூடங்களும்,திருமண மண்டபங்களும் திறந்து அந்த சமூகத்து ஏழை,எளியோருக்கு உதவுவது கண்கூடானதாகும்!

எப்பவோ வாழ்ந்த செங்கல்வராய நாயக்கர்,வள்ளல் பச்சையப்ப முதலியார்…போன்றோர், இன்றும் மக்கள் மனங்களில் கொழுவீற்று இருக்கிறார்கள்! 

அவர்களைவிட இன்று பெரும் செல்வம் குவித்துள்ள உங்களால் வன்னிய சமூகத்திற்கே தான் என்ன பயன்? வாழப்பாடி ராமமூர்த்தியார் வன்னிய சமூக மக்களுக்கு செய்த உதவிகளில் கால்வாசி கூட டாக்டர்.ராமதாசோ, அன்புமணியோ செய்ததில்லை!

சைதை துரைசாமி சத்தமில்லாமல் எத்தனை அரசு வேலைகளுக்கு, அதிலும் குறிப்பாக ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் பதவிகளுக்கு எவ்வளவு வன்னியர்களை தயார் செய்து அனுப்பியுள்ளார்! சைதையார் பொதுவாக அனைத்து பிரிவினருக்குமாக நடத்தினாலும், அதில் கணிசமாக பலனடைந்தவர்கள் வன்னியர்கள் என்பதை அந்த சமூகம் மறுக்காது! தனி மனிதரான அவரால் இவ்வளவு செய்யமுடியும் என்றால், நீங்கள் நினைத்திருந்தால், அவரைவிட நூறு மடங்கு செய்து, லட்சோபலட்சம் வன்னியர்கள் வாழ்வில் மாற்றம் காணச் செய்து அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று இருக்கலாமே! விசுவாசத்திற்கும்,னறிக்கும் பேர் போன வன்னியர்கள் அவரை தெய்வமாக கொண்டாடி இருப்பார்களே!

கிடைத்த 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னிய பெருங்குடி மக்கள் பலன் பெறுவதற்கு எந்தத் துரும்பையும் இது வரை எடுத்துப் போடாத ராமதாஸ் மீண்டும் இடஒதுக்கீடு போராட்டம் என்று வன்னியர்களை தெருவில் இறக்கி போராடச் செய்து கொண்டு தானும், தன் மகனும் பாதுகாப்பாக வீட்டில் பதுங்கிக் கொண்டால் என்ன அர்த்தம்? ’’எது நடந்தாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம்..ம்…அரசை நாம் மிரண்டு போகவைக்க வேண்டும்’’ என்ற அவர் பேச்சைக் கேட்டு தற்போது வன்முறையில் இறங்க யாரும் தயார் இல்லை! ’’நானே களத்தில் இறங்கி போராடுவேன்’’ என்றவர் அரசின் பேச்சுவார்த்தைக்கு கூட அவரோ, அன்பு மணியோ வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை!

ஆரம்பகால போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் குடுபங்களுக்கும், சிறை சென்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் குடும்பங்களுக்கும் ராமதாஸ் என்ன மாதிரி உதவி செய்வார், பாதுகாப்பார் என்பது அனுபவபூர்வமாகத் தெரியும்! அதனால் தான் போராட்ட குணமுள்ள அவ்வளவு வன்னியரும் இன்றைக்கு அவருக்கு எதிராக நிற்கிறார்கள்! 

சமூகநீதிப் போராட்டத்தில் ஐயா ஆனைமுத்துவைவிட பெரிய ஆளாக டாக்டர்.ராமதாஸ் தன்னை கருதிவிட முடியாது!

இன்றைக்கு தன் குடும்பத்திற்கும்,தன் மகனுக்காகவும் தான் டாக்டர் ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்பது வன்னியர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து மனதில் ஆழமாக பதிந்தும்விட்டது. ஒரு காலத்தில் டாக்டர்.ராமதாஸ் என்ற பெயரை பயபக்தியுடனும், பரவசத்துடனும் உச்சரித்த அனேகம் மக்களை பார்த்துள்ளேன். ஆனால்,இன்று அவர் பெயரையோ,அவர் மகன் அன்புமணி பெயரையோ கேட்ட மாத்திரத்தில் உடனடியாக வன்னிய மக்கள் முகங்களில் ஒரு கசப்புணர்வு பீறீட்டு வெளிப்படுவதை அனைவரும் பார்க்கிறோம்! 

முன்பு முக்கிய புரச்சினைகளில் அறிக்கைகளாவது விட்டுக் கொண்டிருந்தார்,ஆனால் பாஜக சகவாசம் தற்போது விவசாயப் போராட்டம் உள்ளிட்ட பலவற்றில் அமைதி காக்கவைத்துவிட்டது!

உள் ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துவிடுவதன் மூலம், தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முயற்சிக்கிறார் டாக்டர்.ராமதாஸ்! ஆனால்,யதார்த்ததில் அப்படி எம்.பி.சியில் இருந்து வன்னியர்களுக்கு எடுத்து உள் ஒதுக்கீடு வழங்குவது அதற்குள் இருக்கும் மற்ற 107 சாதிகளான மீனவர், மறவர், குலாலர் உள்ளிட்டோரை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பிவிடக் கூடியதாகும் என்பதால் யாருக்கும் தைரியம் வரும் என்று தோன்றவில்லை! 

இப்பவே நாடார்கள் தங்களுக்கு 15 சதவிகிதம் கேட்கிறார்கள். அதே போல முக்குலத்தோர்,கொங்கு வேளாளர் ஆகிய பெரும் சமூங்களும் தங்களுக்கு கேட்பார்கள்! இது ஒட்டு மொத்த தமிழகத்தின் சாதி நல்லிணக்கத்திற்கே கேடாகமுடியும் வாய்ப்பும் உள்ளது. டாக்டர்.ராமதாசே முதலமைச்சர் ஆனால் கூட இதை சாத்தியப்படுத்துவது குதிரைக் கொம்பே!

ஆகவே, இந்த விவகாரத்தில் யதார்த்தத்தை வன்னிய மக்களுமே கூட புரிந்து வைத்திருக்கிறார்கள்! எடப்பாடி பழனிச்சாமி தன் கட்சிக்கு சசிகலாவால் ஏற்படவுள்ள பாதிப்புகளை சரிகட்ட, டாக்டர் ராமதாசுக்கு தேவைக்கும் மேல் முக்கியத்துவம் தருகிறார்! உண்மையில் இன்றைய நிலவரப்படி சரிபாதி வன்னியர்கள் பல கட்சிகளிலும் உள்ளனர். மீதமுள்ள பாதியில் மற்றொரு சரிபாதி வஞ்சிக்கப்பட்ட வன்னியர்கள் டாக்டர் ராமதாசையும் பாமகவையும் தோற்கடித்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு களமாடி வருகின்றனர்! ஆக, வன்னியர்களில் கால் பங்கினரே பாமகவை ஆதரிக்கின்றனர். அதே சமயம் பாமகவிற்கு எதிராக பெரும்பாலான சமூகங்கள் அணி திரண்டுள்ளனர். இதை திமுக துல்லியமாக கணித்து தான் பாமகவிற்கு கதவை சாத்திவிட்டது.

 அதிமுகவிற்கு நல்ல காலம் இருக்குமானால் அவர்களுக்கும் புத்தி வரட்டும்! பாமகவை தனிமைப்படுத்துவது தான் வன்னியர்களுக்கும் நல்லது. வருங்கால தமிழகத்திற்குமே நல்லது!


தனிமைபட்ட ராமதாஸ்! பள்ளத்தில் வீழ்ந்த பாமக!

https://aramonline.in/2973/pmk-dr-ramadhas-anbumani-reservation-aram/

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Friday, January 21, 2022

ஊராட்சி மன்றங்களில் A பதிவேடு

 ’A’ பதிவெட்டின் உள்ளடக்கம்

இது ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள நிலத்திப் பரப்பயும், தீர்வை வீதத்தையும் காட்டுகிற ‘A’ பதிவெட்டின் தொகுப்பாகும்.

சென்னசமுத்திரம் ஊராட்சி 

அரசு நிலம்(வகைப்பாடு)

அரசின் கட்டுபாட்டில் உள்ளவை

அரசின் கட்டுபாட்டில் இல்லாதவை

என தனித்தனியே காட்ட வேண்டும். இவற்றை ஆண்டுதோறும் ஜமாபந்தியின் போது காட்ட வேண்டும். நிலவரித் திட்டத்திற்குப் பின்னர் ஒவ்வொரு பசலியிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் ஆண்டுதோறும் குறிப்பிட வேண்டும்.

‘B’ பதிவேடு

இது இனாம்களின் நிலப்புல பதிவேடு ஆகும்.

பல்வேறு வகை இனாம்களின் கீழ் அதாவது சமய, அறக்கட்டளை, சொந்தப்பணி மற்றும் தசபந்தம் ஆகிய இனாம்களின் கீழ் உரிமை பட்டயம் முறைப்படுத்தப்பட்டு அவற்றுக் நேராக ஒவ்வோர் உரிமைப் பட்டயத்தின் கீழ் வரும் புலங்களையும் இதன் கீழ் காட்ட வேண்டும்.

1963- ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் மூலன்=ம் இவை நீக்கப்பட்டது.

இவை 1963-க்கு பிறகு இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முடிந்துவிட்டன.

நிலப்பதிவேடு B1:

இது நில உரிமை பட்டயத்திற்கான நிலப்பதிவேடு – ‘B’ பதிவேட்டிலிருந்து வேறுபட்டது ஆகும்.

தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம் சட்டம் 1948 – இன் கீழ் முடிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு உரியதாகும்.

இவை இரண்டு பாகங்களாக பராமரிக்கப்பட வேண்டும்.

பாகம் 1

தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு – மற்றும் ரயத்துவாரியாக மாற்றம் சட்டம் – 1948(1948 – ஆம் வருட XXVI ஆவது சட்டம்)-இன் கீழ் பிரிவு 17(1) (பி) மற்றும் (2) இன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட இனங்களைக் கொண்டதாகும்.

பாகம் 2

இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் 1951(1951 ஆம் வருட XIX ஆவது சட்டம்)-இன் பிரிவு 34(2)-இன் கீழ் உரிமை அளிக்கப்பட்ட தேவதாசி இனாம்களைக் கொண்டதாகும்.

பாகம் 1:

கீழ்க்கண்டவாறு ஐந்து பிரிவுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது:

சமயக் கொடைகள்

அறக் கொடைகள்

கிராம பணிக்கொடைகள்

தசபந்தம் கொடைகள்

மேற்கண்ட 4-லிலும் அடங்காத ஏனைய கொடைகள்.

பாகம் 2:

1951 – தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டப் பிரிவு 34(2)-இன் கீழ் விவரிக்கப்பட்ட தேவதாசி இனாம்கள் சம்பந்தப்பட்டதாகும்.

கிராமத்தில் பராமரிக்கப்படும் இப்பதிவேட்டை ஜமாபந்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்க வேண்டும்.

நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள்(Cowles) பதிவேடு:

இப்பதிவேடு எட்டு பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்.

பிரிவு – 1 : “Shedule Caste” – இனத்தவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைகளைக் குறித்ததாகும்.

பிரிவு – 2 : இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒப்படைகளைக் குறிப்பதாகும்.

பிரிவு – 3 : நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகளை பற்றியதாகும்.(இவை வருவாய்த் துறை ஆணை நிலை எண் 15-22(3) இன் கீழ் கூறப்பட்டுள்ளது)

பிரிவு – 4 : சிறப்பு வீட்டுமனை விதிகளின் கீழ் உள்ள கொடையைக் குறிக்கும்.

பிரிவு – 5 : நீண்டகால குத்தகை மற்றும் இதர நிபந்தனைகளுக்கு உட்பட்ட கொடைகளுக்கு உரியதாகும்.(வருவாய்த் துறை நிலை ஆணை எண். 19 பத்தி 1- இன் கீழ் கூறப்பட்டுள்ளது)

பிரிவு – 6 : அரசியல் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஒப்படைக்குரியதாகும். (அரசு ஆணை எண், 3102 வருவாய்த் துறை, நாள் 23-12-1947 – இன் படி)

பிரிவு – 7 : நீண்டகால நிலக்குத்தகை நிலங்களைக் குறிக்கும்.

பிரிவு – 8 : SC –இனத்தவருக்கு நில எடுப்பு செய்து ஒப்படை செய்யப்பட்ட வீட்டுமனைகளுக்கு உரியதாகும்.

பட்டா:

கிராமக் கணக்கு எண் 3:

புலங்களின் பதிவுகளின் மாறுதல்களை காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு ஆகும். இவை நான்கு பிரிவுகளைக் கொண்டவை.

பிரிவு – 1 : உரிமையை விட்டுவிடுதல்(Relinquishment)

பிரிவு – 2 : ஒப்படை(Assignment)

பிரிவு – 3 : பட்டா மாறுதல்

பிரிவு – 4 : இதர மாறுதல்கள்

ஒவ்வொரு பிரிவு சம்பந்தப்பட்ட மாறுதல்களை அந்தந்தப் பிரிவின் படிவத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் எழுத வேண்டும்.

மாறுதலுக்கான உத்தரவு விவரங்களைக் கலம் 8-இல் குறிப்பிட வேண்டும்.

பிரிவு – 3 : பட்டா மாறுதல்கள் சம்பந்தமான விவரத்தைப் பொருத்தமட்டில் பதிவு பெற்ற கைப்பற்றுதாரரின் பட்டா எண், பெயர் முன்னும், பின்னும் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும்.

பிரிவு – 3 – இல் கீழ்க்கண்ட 5 உட்பிரிவுகள் அடங்கும்.

வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டவை

(A) அரசால் வாங்கப்பட்டவை

(B) தனி நபரால் வாங்கப்பட்டவை

நீதிமன்ற ஆணையின் பெயரில் விற்பனை அல்லது மாற்றம் செய்யபட்டது.

தனியார் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில் மாற்றப்பட்டது.

வாரிசு முறையினரால் மாற்றப்பட்டது.

12 – ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேல் தொடர்ந்தாற்போல் அனுபோகம் செய்ததினாலும் அது போன்ற காலத்திற்கு பட்டாதாரர் காணப்படாது போனாதினாலும் மாற்றப்பட்டவை.

வாரிசு இன்றி அரசினை சேர்ந்த நிலங்கள்

ஜமாபந்தியின் போதும், ‘அ’ பதிவேடு,அடங்கல்,10-இல் 1-சிட்டாவில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும்.

சிட்டா:

பட்டாவாரியான நிலவரி திட்டத்தினை காண்பிக்கும் சிட்டாவாகும்.

நிலவரித் திட்டம் முடிந்தவுடனேயே இக்கணக்கினை மேற்கொண்டு வருவாய்த்துறைக்கு பராமரிப்புக்காக இரண்டு பிரதிகள் வழங்கப்படுகிறது.

முதல் பிரதி VAO – விடமும்

2 – ஆம் பிரதி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பராமரிக்கப்பட வேண்டும்.

இப்பதிவேடு பட்டாவாரியாக எழுதப்பட வேண்டும்.

ஒரு பட்டாவில் அடங்கிய கைப்பற்றுதாரர்கள் பெயர்கள், சர்வே எண், புன்செய், நன்செய், விஸ்தீரணம், தீர்வை ஆகியவற்றை தொகுத்து அந்தப் பட்டாவில் ஒரு கைப்பற்றில் உள்ள மொத்த புன்செய், நன்செய்ப் பரப்புகள் மற்றும் மொத்தத் தீர்வை ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.

கிராம நிலங்களில் ஏற்படும் மாறுதல்களாவன நில ஒப்படை, நில எடுப்பு, நில எடுப்பு, பதிவு மாற்றம் ஆகிய விவரங்களை கிராமக் கணக்கு எண் 3-இல் குறிப்பிட்டுள்ளபடி, இதில் அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டும்.

இந்தத் மாற்றம் எந்த ஆணையின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதற்கு ஆணை எண் மற்றும் நாள் முதலிய விவரங்கள் குறிப்பிட வேண்டும்.

இதனை சோதனை செய்ததின் அடையாளமாக வருவாய் ஆய்வாளர் அல்லது நில அளவர் கையொப்பம் பெற வேண்டும்.

பொதுவாக பட்டா மாற்றங்கள் செய்யும் போது எந்த பட்டாவில் இருந்து வரவு வைக்கப்பட்டது மற்றும் எந்த பட்டாவில் தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.

இப்பதிவேட்டின் மாறுதல்களின் படி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இவை தற்போது கணினி மயமாக்கப்பட்டதால் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களை கணினியிலும் பதிவு செய்ய வேண்டும்.

இந்த கணக்கு 5-ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக எழுதப்பட வேண்டும்.

கிராமக் கணக்கு எண் 1:

இது கிராமத்தின் மாதவாரி-சாகுபடி கணக்கு ஆகும்.

VAO பயிராய்வு செய்து ஒவ்வொரு மாதமும் எந்தெந்தப் புலங்களில் பயிர்கள் எந்த மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதன் விவரங்களை அடங்கலில் பதிய வேண்டும்.

கிராம கணக்கு எண் 1-A:

இது சாகுபடி செய்யப்பட்ட வெவ்வேறு பயிரக்ளின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டியல் ஆகும்.

நீர் பாய்ச்சப்பட்ட, நீர் பாய்ச்சப்படாத பரப்புகளின் விவரங்கள் தனித்தனியே கலம் 2 முதல் 10 வரை குறிக்க வேண்டும்.

இந்தக் கணக்கை கணக்கு எண்1 உடன் பிரதி மாதம் 25-ஆம் தேதிக்குள் வருவாய் ஆய்வாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

கிராம கணக்கு எண் 2:

இது கிராம அடங்கல் கணக்கு எனப்படும்.

அடங்கல் என்பது கைப்பற்று நிலத்தையும், மற்ற அனைத்து வகையான நிலங்களையும் பிரிவுகளாக புலம் உட்பிரிவு வாரியாக அனைத்து விவரங்களும் காட்டும் ஓர் அதிமுக்கியமான கிராமக் கணக்கு ஆகும்.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலத்திற்கு இக்கணக்கை பராமரிக்க வேண்டும்.

கிராமக் கணக்கு எண் 2-க்கு C உள்ளடக்கம்

வருவாய்த் துறையின் பொறுப்பின் கீழ் உள்ள அரசு புறப்போக்கில் உள்ள மர விவரங்களை காட்டும் பதிவேடு ஆகும்.இது நான்கு பிரிவுகளாகப் பராமரிக்கப்படும்.

அரசுத் தோட்டங்கள்

குடிகளுடைய சொந்தத் தோப்புகள்(வருவாய் நில எண். 19-இன் கீழ் அறிவிக்கப்பட்ட நீண்ட கால நிலக் குத்தகைகள், குடிமக்களுடைய சொந்தத் தோப்புகளில்ன் கீழ் வரும்)

அரசால் வரிவிதிக்கப்பட்டு அல்லது குத்தகைக்கு விடப்பட்டு, ஆனால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனி மரங்கள்

உள்ளாட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆனால் உள்ளாட்சி மன்றங்கள் தங்கள் உரிமைகளை விட்டுவிட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள்.

கிராமக் கணக்கு எண் 2-க்கு D உள்ளடக்கம்:

இது கிராமத்தின் நீர்பாய்ச்சப்பட்ட பரப்பின் விவரங்களை காண்பிக்கும் கணக்கு ஆகும்.

இந்தக் கணக்கு ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும்.

பிரிவு – 1: நதிநீர் பாசன முறைகள் மற்றும் ஏரிகள்:

நதிநீர்ப் பாசன முறை

ஏரிகள்(நீா்தேக்க திட்டத்தால் நிரப்பப் பெற்றவை தவிர)

இதர நீர்ப்பாசன ஆதாரங்கள்

பிரிவு – 2: கிணறுகள்

இந்தக் கணக்கில் ஒவ்வோர் ஆதாரத்துக்கும் நீர் பாய்ச்சக்கூடிய பரப்பு, நடப்புப் பசலியில் நீர் பாய்ச்சப்பட்ட பரப்புப் பற்றி குறிப்பிடப்பட வேண்டும்.

அரசுக்கு சொந்தமான கிணறுகள், தனி நபருக்கு சொந்தமான கிணறுகள் பற்றிய விவரங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

இது ஒரு ‘புள்ளி விவரப் பதிவேடு’ ஆகும்.

அரசு நீர்ப்பாசன ஆதாரங்கள் பழுதுபார்க்கப்பட்ட விவரங்கள், செலவழிக்கப்பட்ட தொகை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். கிராமக் கணக்கு 2E நீக்கப்பட்டது

கிராமக் கணக்கு 2F

இது அடங்கலின் 18 – ஆவது கலம் குறிக்கப்பட்டுள்ள விவரங்களின் சுருக்கம் ஆகும்.

அவை 1) வனம், 2) பயனற்ற பயிர் செய்ய இயலாத நிலம், 3) விவசாய மற்றும் பயன்படுத்தப்படும் நிலம், 4) பயிரிடத்தக்க தரிக, 5) நிலையான புல்தரை, 6) மரவகை பயிர், 7) நடப்புத் தரிஅ, 8) இதரத் தரிசு நிலங்களைக் காட்டும் பதிவேடு ஆகும்.

கிராமக் கணக்கு எண் 3

புலங்களின் பதிவுகளின்(நிலத்தின்) மாறுதல்களை காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு. இது 4-பிரிவுகளைக் கொண்டது.

உரிமையயை விட்டுவிடுதல்(Relinquishment)

ஒப்படை(Assignment Land)

பட்டா மாறுதல்

இதர மாறுதல்களின் போன்றவற்றை குறிப்பதாகும்.

கிராமக் கணக்கு 3A:

கணக்கு 3-இல் கைப்பற்று நிலங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் சுருக்கம் ஆகும்.

கணக்கு எண் 3-இன் சுருக்கத்தின் அடிப்படையில் முன்பசலியில் கைப்பற்றில் இருந்தவைகளில் பிரிவு வாரியாக, கழிவுகளைக் கழித்து, பிரிவு வாரியாகச் சேர்த்தவை

கிராமக் கணக்கு எண் 4:

இது அனைத்து அரசிறைக் கழிவு(Beriz Detuction)களைக் காண்பிக்கும்.

இவை இரண்டு பிரிவுகளில் பராமரிக்கப்படும்.

சமய நிலையங்களுக்காகக் கழிக்கப்படுவது.

மற்ற காரியங்களுக்காகக் கழிக்கப்படுவது

கிராமக் கணக்கு எண் 5(வஜா கணக்கு)

பருவநிலை பாதிப்பு அடையும் போது நிலவரி தள்ளுபடி செய்யபட்டு வருகிறது. இது மூன்று பிரிவுகளாகப் பராமரிக்கப்படுகின்றது.

பிரிவு – 1: பருவநிலை பாதிப்பு ஏற்படும்போது பயிராய்வுச் செய்யப்படு விளைச்சல் அளவு 25 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் அத்தகைய நேர்வுகளில் வஜா செய்யப்படும் தீர்வை விவரங்கள் இதில் காட்டப்படுகிறது. இத்தள்ளுபடிகள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது.

பிரிவு – 2: நிலையான நிரந்தர தள்ளுபடிகள் அனைத்தும் இதில் காட்டப்படுகிறது.

பிரிவு – 3: அசாதாரண நிலையில் பாதிப்பு ஏற்படும் போது வருவாய்நிலை எண் 14-இன் படி நிலவரி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

வஜாக்களின் விவரங்கள்:

பிரிவு 5-I, பிரிவு 5-II, பிரிவு 5-III தீர்வை தள்ளுபடி விவர்ங்களைக் கூறுகின்றன.

பிரிவு 5-I: ஒருபோக நன்செய்யில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீர்ப்பாசன ஆதாரத்தில் தண்ணீர் இல்லாமல், ஏரியில் நீர் வரத்து குறைவானதால் விளைச்சல் 25 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், தரத்தீர்வை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஏரியில் நீர் போதாத நிலையில் நன்செய் நிலங்களில் புன்செய் பயிர் சாகுபடி செய்யப்பட்டால் நன்செய்க்கும் புன்செய்க்கும் உள்ள வித்தியாசத் தீர்வை தள்ளிக் கொடுக்க வேண்டும்.

பிரிவு 5-II : நன்செய் நிலங்கள் நீர்ப்பாசன ஆதாரத்திலிருந்து தன்பாசன முறையாக எடுக்காத நிலையில் இறவை மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய இனங்களில் நிலையான வஜா ஒரு ஏக்கருக்கு ரூ. 1 வீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

பிரிவு 5-III : அசாதாரண நிலை ஏற்படும் போது வருவாய் நிர்வாக ஆணையரின் பரிந்துரைபேரில் அரசு சிறப்பினமாகக் கருதி முழு நிலவரியையும் தள்ளுபடி செய்ய உத்தரவிடலாம்.

இந்தக் கணக்குகளை VAO முறையாகப் பராமரித்து ஜமாபந்தியின் போது, வருவாய்க் கோட்ட அலுவலர் ஒப்புதலுடன் ஜமாபந்தி அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

கிராமக் கணக்கு எண் 6:

இப்பதிவேட்டினை 6, 6-A என்று இரண்டு பிரிவுகளாக பராமரிக்க வேண்டும்.

தண்ணீர் தீர்வை விதிப்பு பற்றி காட்டும் பதிவேடு ஆகும். பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி முறையில் விதிக்கப்படும் அபராதத் கணக்குகள் கணக்கு எண் 6-இல் பராமரிக்கப்படும்.

கிராமக் கணக்கு எண் 6-A உள்ளடக்கம்:

ஒவ்வொரு பட்டாதாரராலும் நீர்ப்பாய்ச்சப்பட்ட தண்ணீருக்காக செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை கூட்டி வரும் மொத்தத்தை கிராமக் கணக்கு 10-இல் – 2 – பிரிவுக்கு எடுத்துச் செல்லும் பதிவேடாகும். (போஸ்டிங் ரிஜிஸ்டர்).

கிராமக் கணக்கு எண் 7:

னுமதி இன்றி புறம்போக்கு, தீர்வை விதிக்கப்பட்ட தரிசு மற்றும் தீர்வை விதிக்கப்படாத தரிசு ஆகிய நிலங்களின் அனுபோகம் செய்யப்படும் புலப்பரப்பையும், பல்வகை வருவாய்களையும் அதற்குண்டான மேல் வரிகளும் காட்டப்படும் பதிவேடு ஆகும். இது இரண்டு பிரிவுகளாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

பிரிவு-1: புறம்போக்கு நிலம், தீர்வை ஏற்பட்ட தரிசு மற்றும் தீர்வை ஏற்படாத தரிசு நிலங்களின் ஆக்ரமாணம், விதிக்கப்படும் தீர்வை, தண்டத் தீர்வை, உள்ளுவர் மேல்வரிகள் ஆகியவற்றை இதில் கணக்கிட வேண்டும்.