Thursday, March 14, 2013


என் பேராசிரியர் மு.வ.
நினைவலைகள்

பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், சிம் பல்கலைக் கழகம், சிங்கப்பூர்

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொழுதார்க்கு வார்த்தை சொலச் சற்குரு வாய்க்குமே என்பதற் கேற்ப எனக்கு முற்பிறவியில் இந்தத் தொழுகையினைச் செய்ததன் பயனாக என்னவோ என்தமிழ்க்கல்விக்கு இப்பிறவியில் நல்ல பேராசிரியர்கள் வாய்த்தார்கள். அழகப்பா கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படிக்கும் போது பேராசிரியர் டாக்டர் வ.சுப.மாணிக்கனார்  எனக்குப் பேராசிரியராக இருந்து பாடம் பயிற்றினார். பிறகு பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாரிடம் கல்வி பயின்றேன். எம்.லிட். ஆய்வுக்கு மேற்பார்வையாளராகப் பேராசிரியர் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களும், முனைவர் பட்டத்திற்கு மேற்பார்வையாளராக பேராசிரியர் ச. அகத்தியலிங்கனார் அவர்களும் இருந்து வழி காட்டினார்கள். இவர்கள் நால்வருமே பின்னாளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகப் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நால்வரில் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களுடன் எனக்கிருந்த தொடர்பு பற்றிய சில நினைவலைகளை விளக்குவதே  இக்கட்டுரை.

பள்ளியிறுதி  வகுப்பு (1954) முடித்து அழகப்பா கல்லூரியில் சேர்வதற்குக் காத்திருந்த காலப் பகுதியில் நண்பர் ஒருவர் டாக்டர் மு.வ.அவர்களின் தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு முதலிய தலைப்பிட்ட நூல்களைப் படிக்கக் கொடுத்தார். இந்நூல்களைப் படித்த பின் என் இதயத்தை மு.வ. அவர்கள் கவர்ந்தார். பிறகு அழகப்பா கல்லூரியில் சேர்ந்ததும் எல்லாவற்றையும் படித்து ஒரு குறிப்பேட்டில் என் உள்ளம் கவர்ந்த கருத்துக்களையும் வரிகளையும் எழுதி வைத்து மனப்பாடம் செய்து வந்தேன். பொறியியல் துறையில் நுழைவதற்கேற்ற கணக்கு, இயற்பியல், வேதியியல், பாடங்களை எடுத்துப் படித்து வந்த எனக்கு மு.வ. அவர்களிடம் தமிழ் கற்க வேண்டும் என்னும் வேட்கை படிப்படியாக வளர்ந்தது. பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பாடங்களும் தூண்டு கோலாக இருந்தன. இடைநிலைத் தேர்வில் பொறியியல் சேர்வதற்குத் தகுதி பெற்ற நிலையிலும் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து டாக்டர் மு.வ. அவர்களிடம் தமிழ் கற்க முயற்சி மேற்கொண்டேன். என் குடும்பத்தார், உறவினர்கள் தமிழ் படித்து என்ன சம்பாதிக்க முடியும்? வாத்தியார் வேலை எவ்வளவு பணம் ஈட்ட முடியும்? எனக் கேள்விகள் எழுப்பியும் நான் தமிழார்வத்தினாலும் மு.வ. அவர்களிடம் பயில வேண்டும் என்பதாலும் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தேன். என் உறவினர் திரு. உ.மு.சுப.லெ.மெய்யப்ப செட்டியார் அவர்கள் என்னைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் கச்சாபிகேச முதலியார் வழியாக அப்போது கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியை அணுகி நான் அக் கல்லூரியில் ய.பு. (க்ஷிலிஐவி) தமிழ் வகுப்பில் 1956 இல் சேர்ந்தேன். என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் டாக்டர் மு.வ.அவர்களைச் சந்தித்த பின்னரே அவ்வகுப்பில் சேர்ந்தனர். நான் ஒருவன் தான் மு.வ. அவர்களைச் சந்தித்த பின்னர் சேரும் வாய்ப்பினைப் பெறவில்லை.

கல்லூரியில் சேர்நத ஒரு வாரத்தில் எனக்குத் திருமணம். எனவே திருமண அழைப்பிதழுடன் முதன் முதலில் மு.வ. அவர்களை, அவர்கள் இல்லத்தில் (30, செல்லம்மாள் தெரு) சந்தித்தேன். மு.வ. அவர்கள் என்னை வரவேற்றுத் திருமண அழைப்பிதழ் கண்டு வியப்புற்று நலம் விசாரித்தார்கள். பிறகு விவரங்களை எடுத்துச் சொல்லி விடுமுறை பெற்று என் சொந்த ஊர் சென்றேன். திருமணத்திற்கு வாழ்த்துக் கடிதம் மு.வ. அனுப்பியிருந்தார்.
ய.பு. (க்ஷிலிஐவி) மூன்றாம் ஆண்டு படிக்கும் போது ஏனைய பாட ஆசிரியர்கள் விடுமுறை எடுத்த நிலையில் எப்போதாயினும் மு.வ. வந்து வகுப்பு எடுப்பார். அவர் வகுப்பு எடுக்க மாட்டாரா என ஏங்கி இருந்த நிலையில் எனக்கு அது தமிழ் விருந்தாக இருந்தது. அப்போது நான் அங்கு பணியாற்றிய பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் , வானொலி நிலைய இயக்குநராகச் சென்றார். பேராசிரியர் க. அன்பழகனார் சில மாதங்கள் எங்களுக்குப் புறநானூறு பாடம் பயிற்றுவித்த பின்னர் கட்சிப் பணிக்குச் சென்றார்.

நான்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டுகளில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் எங்களுக்கும் மு.வ. அவர்கள் நற்றிணைப் பாடம் பயிற்றுவித்தார். சங்க இலக்கியப் பாடல்களை மு.வ. அவர்கள் படிக்கும் விதமும் அவற்றிற்கு எளிய முறையில் பொருள் கூறும் போக்கும், மேற்கோள், நயம் சொல்லும் இயல்பும் என உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற்கும் பெற்றியன. அக்காலத்தில் மு.வ. அவர்கள் எழுதிய நூல்களை வெளிவரும் நாளை அறிந்து பாரி நிலையம் சென்று வாங்கி வந்து படித்து முடித்தால் தான் என் உள்ளம் ஆறுதல் பெறும். மு.வ. அவர்கள் விரிவுரையின் போது சொல்லிய ஒவ்வொரு சொல்லையும் விடாமல் குறிப்பு எடுத்து விடுவது என் வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் மு.வ. என்று நான் சொல்ல மாட்டேன். டாக்டர் மு.வரதராசனார் னி.பு.,னி.நு.ஸி., Pஜு.ம்.,   என்று சொல்லித்தான் நிறுத்துவேன் என என் நண்பர்கள் சொல்லி க் கேலி செய்வார்கள். கல்லூரியில் படிப்பு முடிந்ததும் எனக்கு ஒரு நல்ல சான்றிதழ் தம் கைப்பட எழுதிக் கொடுத்தார்கள். முத்து முத்தான கையயழுத்து, அடித்தல் திருத்தல் இல்லாத பாங்கு. அது நான் வேலை வாய்ப்புப் பெற அடித்தளமாக இருந்து உதவியது.

நான் அதிராம்பட்டினம் காதர் மொகைதீன் கல்லூரியில் ( 1959-60)  தமிழ்ப் பயிற்றுநர் மிற்மிலிr பணி செய்து கொண்டிருந்த நிலையில் எனக்கு ஆண்மகன் பிறந்தான். அம் மகனுக்குப் பெயர் வைத்தருளுமாறு மு.வ. அவர்களுக்கு கடிதம் வழி வேண்டுகோள் விடுத்தேன். மு.வ. அவர்களும் வாழ்த்தியதுடன் அருள் மொழி எனப் பெயரிட்டுக் கடிதம் எழுதியிருந்தார். சேக்கிழார் ஆகிய கவியரசர் ‡ இராசஇராச சோழன் ஆகிய புவியரசர் இருவர் பெயரும் இணைந்த நிலையில் அருள் மொழி எனப் பெயர் அமைந்தது அறிந்து மகிழ்ந்தேன்.

1960 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது மு.வ. அவர்கள் பல்வேறு கல்விப் பணி தொடர்பாக வரும் போதெல்லாம் விருந்தினர் விடுதியில் சந்திப்பேன். என்னுடைய எம்.லிட். பட்டத்திற்கு புறநிலைத் தேர்வாளராக மு.வ. அவர்கள் இருந்தார்கள். அவருடன் டாக்டர் எஸ்.எம். கத்ரேயும்  இருந்தார். மு.வ. அவர்கள் கோடை விடுமுறையின் போது பெங்களூர் சென்று தங்குவது அக்கால வழக்கமாக இருந்தது. எனவே அவர் வசதி கருதி என்னுடைய எம்.லிட்.பட்டத்திற்குரிய நேர்முகத் தேர்வு பெங்களூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் நிமித்தம் பேராசிரியர் தெ.பொ.மீ.யுடன் நான் பெங்களூர் சென்றேன். அப்போது தண்.கி. வெங்கிடாசலம் பெங்களூரில் பேராசிரியராக இருந்ததால் எங்களுக்கு விருந்தோம்பிச் சிறப்பித்தார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகமொழியியல் துறை இணைப் பேராசிரியராக இருந்த போது அத்துறையின் சார்பாக மொழியியல் அறிஞர்  எல்.வி. இராமசாமி அய்யர் அவர்களின் திராவிட மொழி ஒப்பியியலாய்வுக்குரிய பங்களிப்பு பற்றிய ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதற்கு நான் செயலாளராகப் பணியாற்றினேன். அதற்கு வரவேண்டிய சிறப்பு விருந்தினர் ஒரு கன்னடப் பேராசிரியர் எதிர்பாராத விதமாக வர இயலவில்லை. எனவே அப்போது அங்கு வந்திருந்த பேராசிரியர் மு.வ. அவர்களைச் சிறப்பு விருந்தினராக இருந்து எல்.வி. இராமசாமி அய்யர் படத்தைத் திறந்து வைக்குமாறு  நானும்  பேராசிரியர் அகத்தியலிங்கனாரும் வேண்டினோம். எங்கள் வேண்டுகோளை ஏற்றுப் படத்தைத் திறந்து வைத்து அய்யர் அவர்ளின் பங்களிப்புப் பற்றி அரியதொரு சொற்பொழிவாற்றி மு.வ. அவர்கள் சிறப்பித்தார்கள். அப்போது என் வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தேன். வந்து என் குடும்பத்தினரோடு  அளவளாவி விருந்துண்டு சென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும்.

நான் மலேயாப்  பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையில் பணியாற்றிய போது மு.வ. அவர்கள்  மதுரை பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தார்கள். ஒரு முறை தமிழகம் வந்த போது அவர்களைத் துணை வேந்தர் அலுவலகத்தில் கண்டு சந்தித்துரையாடி மகிழ்ந்தேன். அப்போது அவர்களுக்கு ஒரு பார்க்கர் பேனா ஒன்றை அன்பளிப்பாகக்  கொடுத்தேன். அன்பு போதும் அளிப்பு வேண்டாம் எனக் கூறி அதனை ஏற்க மறுத்து விட்டார்கள்.
பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய போது நான் மு.வ. அவர்களின்  இறப்புச் செய்தி வந்தது. பல்கலைக் கழகப் பணி ஒன்றின் காரணமாக அவர்களின் இறப்புச் சடங்கில் கலந்து கொள்ள இயலாமல் போயிற்று.

சிங்கப்பூர் வந்த பணியாற்றத் தொடங்கிய பின்னர் பாடநூலாக்கக் குழுவின் மதியுரைஞராகப் பணியாற்றிய சூழலில் உயர்நிலைப் பள்ளிப் பாட நூல் ஒன்றில்  மு.வ. அவர்களைப் பற்றிய பாடம் ஒன்றை எழுத ஆவன செய்தேன். என் பேச்சு, எழுத்து, விரிவுரை எல்லாவற்றிலும் மு.வ. அவர்களின் கருத்துகளைச் சொல்லும் போதெல்லாம் என் பேராசிரியர் எனப் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். டாக்டர் மு.வ. அவர்களின் மாணவன் என்பது என் வாழ்வில் பெற்ற பெரும் பேறு! அதனால் முன்னுக்கு வந்தவன் நான் என்பதில் ஐயமில்லை.


No comments:

Post a Comment