தண்டாயுதபாணி வழிபாடு
நகரத்தார்கள் அனைவரும் சைவராக இருந்தும் வெளிநாடுகளில் அவர்கள் சிவபெருமானைவிட தண்டாயுதபாணிக்கே மிகுதியாகக் கோவில் கட்டியும் விழா எடுத்தும் வருகின்றனர். இதற்குக் காரணம் சிவாலயங்கள் சிவ ஆகம விதிப்படி நிறுவப்பட்டு அவ்வாறே சிவபெருமான் வழிபடப் பெற வேண்டும். அந்த ஆகம முறைகளை வெளிநாடுகளில் கடைப்பிடிக்க இயலாது. முறை தவறி நடக்க நேரின் ஏற்படும் அபசாரத்துக்கு- சிவ அபசாரத்துக்கு- நிவர்த்தி செய்ய வழியில்லை. மேலும், சிவலிங்கத்தைப் பூசை செய்வது கிரகஸ்த சிவாச்சாரியார்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும். சான்று திருவிளையாடற் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம். தொழில் செய்யும் தொலை தூரங்களில் நியமநிஷ்டையுடன் இருப்பதிலுள்ள இன்னலை நகரத்தார்கள் உணர்ந்திருப்பதிலிருந்து அவர் களுடைய அடக்கமும் பக்தியுணர்ச்சியும் புலனாகும்.
மன்னிக்கும் தன்மை தண்டாயுதபாணிக்கு உண்டு. தாங்கள் செய்யக் கூடிய சிறு தவறுகளை மறந்து மன்னித்துத் தங்களை வாழ வைக்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு, இவர்கள் சிறப்பிடம் தந்துள்ளனர். கோவில் கட்டுவதற்கு முன் அல்லது கோவில் கட்ட இயலாத சிறு ஊர்களில் தண்டாயுதபாணி படத்தை வைத்து வழிபடுவதே வழக்கம்.
முருகன் என்றும் தண்டாயுதபாணி என்றும் சுப்பிரமணியர் என்றும் தமிழ் மக்கள் போற்றும் இறைவனை வட இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவர். கல்கத்தாவில் ஒரு பெரிய அறிஞர் நகரத்தார் தொடர்பால் தமிழ் மொழி பயின்று, சுநீதி குமார் சாட்டர்ஜி என்ற தம் பெயரை நன்னெறி முருகன் என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
வீடுகளில் பூசை போடும்போது, வேல் ஊன்றிப் பூசை போடுவதும் அதற்குச் சுப்பிரமணியர் பூசை என்று பெயரிடுவதும் மரபு. சுப்பிரமணியருக்கு எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை பெயர்களும் செட்டியார் சமூகத்தில் வழங்கக் காணலாம். நகரத்தார்கள் வாழும் சில ஊர்களில் ஏற்கெனவே சிவன் கோவில்கள் ‡ சிவகங்கை ஜமீன்தார் முதலியவர்களால் கட்டப்பட்டிருந்தன. அவ்வூர்களில் நகரக் கோவில் கட்ட முடிவு செய்த போது, நகரத்தார்கள் தண்டாயுதபாணிக்கே கோவில் கட்டியுள்ளனர். கல்லுப்பட்டி, கூழிபிறை, கோனாபட்டு, நெற்குப்பை ஆகிய ஊர்களிலும் உலகம்பட்டி ஞானியார் மடத்திலும் நகரத்தார்கள் சுப்பிரமணியர்க்குக் கோவில்கள் அமைத்துள்ளனர்.
-‘கண’
No comments:
Post a Comment