Monday, December 30, 2019

நகரத்தார்களின் பொதுநோக்கு : தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் எம்.ஏ.,

நகரத்தார்களின் பொதுநோக்கு
தமிழண்ணல் இராம. பெரியகருப்பன் எம்.ஏ., 
தமிழ் விரிவுரையாளர், தியாகராசர் கல்லூரி, மதுரை

நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் அனைவரும் சைவ சமயத்தினராக விளங்குகின்றனர். அதன் பயனாகச் சைவ சமயத்தின் பொதுநோக்கு அவர்கள் பாலும் விளங்கக் காண்கிறோம். முதலியார், நாயுடு, பிள்ளைமார் போன்ற பிற சமூகத்தினர்களில் சைவநெறிப் பட்டவர்களும், வைணவ நெறிப்பட்டவர்களுமாக இரு சாரரும் உளர். இன்னும் சில சமூகங்களில் கிறித்துவர்கள், இந்துக்கள் ஆகிய இரு சமயத்தினரும் உள்ளனர். நகரத்தார் பால் இவை போன்ற பிரிவினை கிடையாது. அனைவரும் சைவரே. ஆயினும் காழ்ப்பற்ற சமர நோக்கத்தால் திருமாலை வழிபடுவதிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

நகரத்தார் சமூகத்தினர் பல திருமால் கோயில்களை உருவாக்கிப் பேணி வருகின்றனர். செட்டி நாட்டின் முதன்மை வாய்ந்த நகரமாகிய காரைக்குடியில் கல்லுக்கட்டி மேல் கரையில் கிருஷ்ணன் கோயில் இருக்கிறது. காரைக்குடிக்கு அடுத்த அரியக்குடியிலிருக்கின்ற சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு, நகரத்தார் பல இலட்ச ரூபாய்களைச் செலவிட்டுள்ளனர். தேவகோட்டை நகரத்தார் வடகலைப் பெருமாள் கோயில், தென்கலைப் பெருமாள் கோயில் என இரண்டு கோயில்கள் கட்டியுள்ளனர். இக்கோயில்களின் திருப்பணிகளும் அன்றாடப் பூசை நடைமுறைகளும், வைணவர்களல்லாத சைவர்களாகிய நகரத்தார்களின் பொருளுதவியால் நிகழ்த்தப்பெற்று வருகின்றன.

மேலும் அரண்மனைச சிறுவயல் நகரத்தார் தம் செலவில் பெருமாள் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். கீழச் சிவற்பட்டி, கொற்றமங்கலம், செம்பொன்னூர், பாகனேரி ஆகிய ஊர்களிலும் நகரத்தார், பெருமாள் கோயில்களைக் கட்டி யுள்ளனர். நாட்டரசன் கோட்டை நகரத்தார்கள், அலர்மேலு மங்கைத் தாயார் உடனிருக்கும் வேங்கடேசப் பெருமாள் கோயில் ஒன்று கட்டியுள்ளனர்.
வைணவத் தலமாகிய திருக்கோட்டியூர்க் கோயில் திருப்பணிகளிலும் அதன் திருவிழா நிகழ்ச்சிகளிலும் இவ்வினத்தவர்க்குச் சிறப்பான பங்குண்டு. வைணவர் போற்றும் தலமாகிய திருமெய்யத்திலிருக்கின்ற சத்திய மூர்த்தி கோயிலிலுள்ள கல் திருமேனிகளுக்கு இராமச்சந்திரபுரம் தீ.நா.முத்தையா செட்டியாரவர்கள் தைலக் காப்பிட்டுள்ளார்கள். அரிமேளத்திற்கு அருகேயுள்ள கடையக்குடிப் பெருமாள் கோயிலில் நடைபெறும் கசேந்திர மோட்ச விழாவிற்கு நகரத்தார் பெண் மக்கள் பெரிதும் விரும்பிப் போய் வருகின்றனர்.
பர்மாவில் கல்வி வளரும் கம்பை என்னும் சிற்றூரில், நாயுடு சமூகத்தினர் பெருமாள் கோயில் ஒன்று கட்டியுள்ளனர். இக்கோயிலின்கண் நகரத்தார்களும் சில திருப்பணிகள் செய்துள்ளனர்.  தில்லை நடராசப் பெருமான் எல்லையிலா இன்ப நடம் புரியும் பொன்னம்பலத்திற்கு அணிமையில் கோவிந்தராசப் பெருமானின் கோவிலொன்று உளது. அக்கோயில் சிதைந்து இடிந்துவிழும் நிலையிலிருந்த போதும், சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டமை காரணமாகப் பழுதுபார்க்கப்படாதிருந்தது. அவ்விரு திறத்தாரையும் அமைதியான முறையில் உடன்படச் செய்தவர் நகரத்தாராகிய அண்ணாமலை அரசரே ஆவார். அதன் பயனாகக் கோவிந்தராசருக்குப் புதிய கற்கோயிலமைந்து 1934 இல் குடமுழுக்கு நடைபெற்றது.

நகரப் பெருங்கோயிலாகிய இளையாற்றாங்குடியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலைக் கழனிவாசற்குடியார் என்ற பிரிவைச் சேர்ந்த நகரத்தார் கட்டியுள்ளனர். இரணியூர் நகரப் பெருங்கோயிலில் இரா நாராயணப் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
நகரத்தார் குடும்பங்கள் பலவற்றில் இராமர் படம் வைத்து வழிபடுவதை இன்றும் காணுகிறோம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து, இராமாயணக் கதையை இரவுதோறும் படித்து, அத்திங்களின் இறுதியில் பட்டாபிடேக விழாக் கொண்டாடும் வழக்கம் இன்றும் செட்டிநாட்டில் பல குடும்பங்களில் நிலவுகிறது. இவர்கள் தம்பாலுள்ள இராமாயண ஏடுகளை மிகுந்த பக்தியுடன் பேணிப் போற்றுகின்றனர். இப்புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைதோறும் பலருக்கும் விருந்திட்டு மகிழ்கின்றனர்.
தனி ஒருவர் இல்லத்திற்குள்ளேயே பெருமாள் கோயில் ஒன்று இருக்கும் காட்சியையும் தேவகோட்டை நகரில் கண்டேன். உயர்திரு.பி.எஸ். சாத்தப்ப செட்டியார் அவர்கள் 1943 இல் தம் மாளிகையில் ஒரு பெருமாள் கோயிலை அமைத்து அதனருகே பூசகர்க்கும் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கு இரண்டு காலப் பூசை நடைபெற்று வருகிறது. மூலவிக்கிரகம் கல்லாலும், உற்சவ விக்கிரகம் தங்கத்தாலும் ஆனவை.

நகரத்தார் வாழுமிடங்களில் அனைத்துச் சமயத்தவர்களும் அன்பு வாழ்வு வாழ்கின்றனர். நகரத்தார் தமது சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர்கள். பழக்க வழக்கங்களிலும் சமயம் மொழி கலை பண்பாட்டுத் துறைகளிலும் அவர்களை பழமை விரும்பிகள் (ளீலிஐவிerஸழிமிஷ்ஸeவி) எனலாம். சமூகக் கட்டுப்பாடுகட்கு உட்படும் மனப்பான்மை படைத்தவர்கள். பிற சமயத்தவர்கள் தத்தம் சமயங்களில் எவ்வளவு பற்றுக் கொண்டிருப்பினும் அக்காரணத்திற்காக அவர்களை இந்நகரத்தார் வெறுப்பதில்லை. ஆனால், தமது சமய வாழ்வுக்குப் பிறருடைய சமயப்பற்று குறுக்கே வருமாயின், அப்போதுதான் அதனை வெறுத்தொதுக்க முற்படுவர்.

மதுரையை ஆண்ட இந்து மன்னரான திருமலை நாயக்கர் கிறித்துவ சமயம் மதுரையில் கால்கொள்ள இடம் கொடுத்தார். தஞ்சையை ஆண்ட இடைக்காலச் சோழ மன்னர்கள் நாகையில் பெளத்த விகாரம் ஒன்று அமைக்க ஆதரவு தந்தனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மராட்டிய மன்னர்கள் நாகூர் ஆண்டவர் மசூதிக்கும் வேளாங்கண்ணியிலும் தரங்கம்பாடியிலும் உள்ள கிறித்துவத் தேவாலயங்களுக் கும் உதவி செய்துள்ளனர். இங்ஙனம் இம்மன்னர்கள் தமது சமரசப் பொது நோக்கைப் புலப்படுத்தியிருப்பதுபோல மன்னர் பின்னோரான நகரத்தார் வணிகர்களும் தனிப்பட்ட முறையிலும் பொது முறையிலும் பிற மதச் சார்புடையவர்களால் நடைபெறுகின்ற அற நிறுவனங்கட்கும் கோயில்கட்கும் இந்தியாவிலும் பர்மாவிலும் ஏனைய நாடுகளிலும் நன்கொடைகள் வழங்கித் தமது சமரச மனப்பான்மையை நிலைநிறுத்தியுள்ளனர்.

பிறரும் தம்மைப்போல வாழ எண்ணும் இப் பெருந்தன்மை மிக்க பொதுநோக்கு போற்றுதற்குரியதாகுமன்றோ!

No comments:

Post a Comment