Monday, December 30, 2019

திவ்வியப் பிரபந்த உரைகளின் தனித்தன்மைகள்: டாக்டர் தெ.ஞானசுந்தரம் எம்.ஏ.பிஎச்.டி.

திவ்வியப் பிரபந்த உரைகளின் தனித்தன்மைகள்
டாக்டர் தெ.ஞானசுந்தரம் எம்.ஏ.பிஎச்.டி.

வைணவர் தந்த செல்வம்

இராமானுசரால் சிலரது தனிவுடைமையாக இருந்த திவ்வியப பிரபந்தங்கள் பொதுவுடைமை ஆயின. அவருக்கு முன்னே திவ்வியப் பிரபந்த விளக்கங்கள் மறையவர் குலத்தில் பிறந்த சிலருக்கே ஆசிரியன்மாரால் சொல்லப்பட்டு வந்தன. இந்நிலையினை மாற்றிய பெருமை இராமானுசரையே சாரும். அவர் திருவாய் மொழியின் பொருளை எல்லோருக்கும் விளக்க வேண்டும் என்று பணித்தார். அதன் விளைவாக முதலில் திருவாய்மொழிக்கும் பின்னர் மற்ற நூல்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக உரைகள் எழுத்து வடிவில் மலர்ந்தன.
இராமானுசரின் ஏற்பு மகனாகவும் மாணாக்கராகவும் திகழ்ந்த திருக்குருகைப் பிரான்பிள்ளான் வரைந்த ஆறாயிரப்படியே வைணவம் கண்ட முதல் உரையாகும். அதன் பின்னர் நஞ்சீயரும், பெரிய வாச்சான் பிள்ளையும், நம்பிள்ளையும், வாதிகேசரி அழகிய மணவாளசீயரும் முறையே ஒன்பதினாயிரப் படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு, பன்னீராயிரப்படி ஆகிய உரைகளைத் திருவாய்மொழிக்குத் தந்தனர். ஏனைய நூல்கள் அனைத்திற் கும் பெரிய வாச்சான் பிள்ளை உரை கண்டார். அவற்றுள் பெரியாழ்வார் திருமொழிக்கு அவர் தீட்டிய உரையில் முதல் நானூறு பாக்களுக்கு உரிய பகுதி கிடைக்காமல் மறைந்து போயிற்று. அப்பகுதிக்குத் திருவாய்மொழிப் பிள்ளையும் மணவாள மாமுனிகளும் உரை எழுதினர். இவை தவிரத் திருப்பள்ளியயழுச்சிக்கும் திருவிருத்தத்துக்கும் நம் பிள்ளை உரையும், திருப்பாவைக்கும் அமலானாதி பிரானுக்கும் அழகிய மணவாள பெருமாள் நாயனார் உரையும், கண்ணி நுண் சிறுத்தாம்புக்கு நஞ்சியர், தம்பிள்ளை ஆகியோர் உரைகளும், ‘மைவண்ண நறுங்குஞ்சி’ என்னும் திருநெடுத்தாண்டகப் பாட்டிற்குப் பட்டர் உரைத்த விரிந்த உரையும் கிடைத்துள்ளன. இவையே திவ்வியப் பிரபந்தங்களுக்கு அமைந்த பழமையான உரைகள் ஆகும்.

கூட்டுப்பயிர்

உரை உலகத்தில் ஒப்பற்று விளங்குவன வைணவ உரைகள் என்பது அறிஞர் துணிபு. இதற்குக் காரணம் அவ் உரைகள் தனி மனிதர்களின் படைப்புகள் அல்ல.  இலக்கிய நெஞ்சமும் சமயப் பிடிப்பும் கொண்ட வைணவ அறிஞர்கள் பலர் சேர்ந்து வளர்த்த கூட்டுப்பயிர்கள். ஆசிரியன்மார் திருமாளிகைகளில் (இல்லங்களில்) மறைவாகச் சிலருக்கே சொல்லப்பட்டு வந்த விளக்கங்கள் இறைவன் திரு முற்றங்களில் இராமானுசர் காலம் முதல் நிகழலாயின. இத் திருமுற்றப் பள்ளிகளில் மறையவர்களுக்கு மட்டுமேயன்றி மற்றைக் குலத்தார்க்கும் பெண்ணுக்கும் பேதைக்கும் இடம் கிடைத்தன. பாசுரங்கள் விளக்கப்படும் போது கேட்டிருந்தார் தம் உள்ளத்தில் பளிச்சிட்ட கருத்துகளையும் எடுத்துச் சொன்னார்கள்.

(திருவாய்மொழி 6:4:5 இன் ஈட்டுரையிலும் மூன்றாம் திருவந்தாதி 91 ஆம் பாட்டின் உரையிலும் உறங்காவில்லிதாசர் சொன்னவையும், பெரிய திருமொழி 10:2:1 இன் உரையில் நம்பிள்ளை நஞ்சீயருக்குச் சொன்ன திருத்தத்தையும் காண்க.)

அவ்வாறு சொல்லப்பட்ட அழகிய விளக்கங்களை முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் பாங்கு ஆசிரியர்களாக விளங்கிய சமயத் தலைவர்களிடம் நிறைந்திருந்தது.

இராமானுசருக்கு முன் இருந்த சமயத் தலைவரான ஆளவந்தார் திருமாலையாண்டானுக்குச் சொல்லிவைத்த உரை நயங்களும், இராமானுசர், எம்பார், கூரத்தாழ்வான், அமுதனார், திருநறையூர்அரையர் முதலானோர் கொண்ட உரைகளும் சொன்ன கருத்துகளும் ஈட்டுரையிலும் பெரிய வாச்சான் பிள்ளை உரையிலும் பொதிந்து கிடக்கின்றன. ஓர் உரையில் ஒருவர் தந்த விளக்கமாகச் சொல்லப்படுவது பிறிதோர் உரையில் பெயரின்றி இடம் பெற்றிருந்ததைக் காணலாம். இவற்றால் இவ் உரைகளை அக்கால அறிஞர்களின் கூட்டுச் சிந்தனையின் விளைச்சல் என்பது பொருந்தும்.

புதிய சங்கமம்
இவ் உரைகளில் வடமொழி  வேதக் கருத்துகளும் தமிழ் மண்ணில் உலாவிய ஆழ்வார்களின் தூய சிந்தனைகளும் ஒன்றாகக் கலந்தன. இது புனித சங்கமம் மட்டும் அன்று; புதிய சங்கமும் கூட! வைணவப் பெருமக்கள் ஆழ்வார்களின் கருத்துகளோடு வடமொழி மறைக் கருத்துகளை இணைத்து எழுதுவதனை ஒரு கொள்கையாகக் கடைப்பிடித்தனர். இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.

வைணவ சமயக் கோட்பாடுகள் செம்மையாக உருப்பெற்று வேரூன்றத் தொடங்கிய காலம். பல கிளைகளாகப் பிரிந்து கிடக்கும் வேதங்களின் பொருள்களை விளக்குவதில் சிக்கல்களைச் சிந்தித்த காலப்பகுதி அது. வேததத்தில், ‘பரம் பொருள் ஒன்றே உள்ளது’ என்னும் அத்வைதக் கொள்கையினை வற்புறுத்தும் தொடர் களும், ‘பரம்பொருள் வேறு ; உயிர் வேறு’ என்னும் துவைதக் கொள்கையினை வற்புறுத்தும் தொடர்களும், இவ் இரு தொடர்களையும் இணைத்து இசைவிக்கும் தொடர்களும் காணப்படுகின்றன.

இவற்றை முறையே அபேத, பேத, கடக சுருதிகள் என்பர். இப்படி வேறு பிரித்துச் சொல்லும் தொடர்களையும் ஒன்று படுத்திச் சொல்லும் தொடர்களையும், இணைத்து இசைவிக்கும் தொடர்களைக் கொண்டு ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே விசிட்டாத்வைதம். இவ்வாறு ஒற்றுமைப்படுத்திக் காட்டும் பணியின் ஆசிரியன்மார்களுக்கு ஆழ்வார்களின் பாசுரங்கள் துணை புரிந்தன.

ஆழ்வார்களின் பாசுர விளக்கொளியில் வேதங்களை உற்று நோக்கிய போது அவர்களுக்குப் பல தெளிவுகள் உண்டாயின. ‘பரம்பொருள் வேறு; உயிர்களும் உலகங்களும் வேறு. ஆனால் பரம்பொருளுக்கு அவை உடலாக அமைகின்றன. எனவே பரம்பொருள் அவற்றோடு கூடிய நிலையில் ஒன்றாக இருக்கின்றான். இறைவனும், உயிரும், உலகமும் உள்ள பொருள்களே’ என்னும் விசிட்டாத்தைவக் கோட்பாட்டினை  ஆழ்வார்களின் பாசுரங்கள் நன்கு விளக்கின.

இவற்றின் துணை கொண்டு வேதப் பகுதிகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை உண்டாயிற்று. ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்னும் வேதாந்த தேசிகரின் பாசுரமே இதற்குத் தக்க சான்று.

எனவே உண்மைப் பொருளை அறுதியிடுவதற்கு வடமொழி வேதங்களைப் போல ஆழ்வார்களின் பாசுரங்களும் மேற்கோள்கள் (பிரமாணங்கள்) என்று கருதினர். இதனை வற்புறுத்தும் வகையில், வேதம் வேறு, ஆழ்வார்கள் பாசுரங்ள் வேறு அல்ல ; வேதமே ஆழ்வார்களின் பாடங்களாகப்புதிய பிறப்பெடுத்தன என்று எழுதினர். இக் கருத்தினாலேயே இவற்றைத் தமிழ் வேதம் என்று கூறி வடமொழி வேதங்களோடு ஒப்ப வைத்து ‘உபய வேதாந்தம்’ என்று போற்றினர். தங்கள் விளக்கங்களில் வடமொழி மறை முடிபுகளும் ஆழ்வார்கள் சிந்தனைகளும் பல இடங்களில் கைகோத்துச் செல்வதனை எடுத்துக்காட்டினர். இதனால் இவ் உரைகள் வடமொழி மேற்கோள்கள் மிகுந்தனவாய், இரு பெருஞ் சிந்தனையோட்டங்களின் சங்கமமாய்த் திகழ்கின்றன.

நம்மாழ்வார்,
தகுங் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகுஞ் சோதி மேலறிவார் எவரே
என்று ‘மிகும் சோதி’யாகப் போற்றுகிறார்.

உப நிடதங்களும் நாராயணனை மேலான ஒலி வடிவினனாகவே சொல்லுகின்றன என்பதனை,

‘பரஞ் ஜ்யோதி ருபஸம்பத்ய’ (பரஞ்சோதி என்னும் சொல்லுக்குப் பொருளான பரம் பொருளினை அடைந்து)

‘நாராயண பரோ ஜ்யோதி’ (பரம் பொருளும் நாராயணனே, பரஞ்சோதியும் நாராயணனே) என்று, நாராயணானு வாகம் முதலியவற்றில் வரும் தொடர்களைக் காட்டி விளக்குவர் (திருவாய்மொழி, 2:2:5-36).

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண் ணோர்க்குத்
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
என்னும் திருவாய்மொழி

 இறைவனை மண்ணுலகத்திற்கும் விண்ணுலகத் திற்கும் கண்ணாகச் சொல்கிறது. இதே கருத்து யசுர் வேதத்திலும்,

‘சக்ஷுர்த் தேவாநாமுத மர்த்யநாம்’ (விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் கண்) என்று வருதலைக் காட்டுவர். (திருவாய் மொழி, 1:8:3-36).

‘பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ என்னும் திருவாய்மொழிப் பகுதியினை விளக்குமிடத்தில் இதனையே வினையடியாகப் பிறவாத பெருமான் விழைவடியாகப் பல வகையாகப் பிறக்கிறான். அதனைப் பெரியோர்கள் அறிவார்கள்
(அஜாய மாநோ பஹூதா விஜாயதே தஸ்ய தீரா: பரிஜா நந்தி யோநிம்)

என்று வேதம் புகல்கிறது என்று ஒப்பிட்டுக் காட்டுவர் (திருவாய்மொழி, 2:9:5-36).

இவ்வாறு அங்கங்கே வேதக் கருத்துகள் விரவி வருதல் காணலாம்.

இதிகாச விருந்து

வேதம், இதிகாசங்கள், புராணங்கள், திருவாய்மொழி ஆகியன ஒரு கருத்தினை வெவ்வேறு வகையில் விளக்குவன என்பது இவர்தம் கருத்து. இதனை, இவற்றை இறைவனுடைய வெவ்வேறு வடிவங்களோடு ‘பரத்வம் போலே வேதம், அவதாரம் போலே இதிகாசங்கள், அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி’ என்று ஈடு ஒப்பிட்டுச் சொல்வதால் அறியலாம். (திருவாய்மொழி, 5:7:11 - 36). இவ் இதிகாசங்களிலும் இராமாயணத்திலும் இவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. பெரியவாச்சான் பிள்ளை தமது உரையில் ‘ஸ்ரீராமாயணம் அவிழ்த்துக் காட்டாத இடம் நாடல்ல, கொடுவினைத் தூறு’ என்கிறார். (திருவாய்மொழி, 7:5:2-24). எனவே இவர்கள் பாசுரப் பலாச்சுளைகளை இராமாயணத் தேனிலும் பாரத நெய்யிலும் தோய்த்துப் பரிமாறினர்.

நம்மாழ்வார் இறைவனை நோக்கி ‘உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை’ என்று வேண்டுகிறார். இதில் பொன்னடி என்பதற்குக் கல்லுக்கும் சைதந்யம் (உயிர்) கொடுக்க வல்ல அடியன்றோ என்று அகவிசை வரலாற்றினை இணைத்து உரை வரைகிறது ஈடு (திருவாய்மொழி,2:9:10-35).

கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று
என்னும் பாசுரத்தில் ‘வள்ளி மருங்குல் என்றன் மடமானினை’ என்பதற்கு, ‘அவனைக் கொடு வந்த விச்வாமித்ரனைச் சொல்லுகிறது. இவளுடைய அழகாயிற்று அவனை அழைப்பித்தது’ என்று பெரிய திருமொழியில் உரை எழுதப்பட்டுள்ளது. (பெரிய திருமொழி, 3:7:1 உரை).

இதில் இராமபிரானை விசுவாமித்தரன் மிதிலைக்கு அழைத்துச் சென்ற செய்தி நயமாகப் பின்னப் பட்டுள்ளது.

தலைமகள் வண்டினை நோக்கி, ‘என் நிலைமை உரையாயே’ என்று வேண்டுகிறாள். இதில் ‘உரையாயே’ என்பதன் உரையில், ‘ஒரு கந்தர்வன் துர்யோதநனைக் கட்டிக் கொண்டு போகா நிற்கச் செய்தே தர்மபுத்ரன் பேரைச் சொல்லிக் கூப்பிட, அவனை பின்னை ஆந்ருசம்ஸ்யத்தாலே (இரக்கத்தாலே) மீட்டான் என்னை நின்றது ; அங்ஙனன்றிற்கே தன்னை ஆசைப்பட்டுப் பிரிந்திருந்து நோவுபடுகிறபடியைக் கேட்டால் உதவாத ஸ்வபாவனோ என்கிறாள்’ என்று பாரத நிகழ்ச்சி எடுத்துக்காட்டப்படுகிறது. (பெரிய திருமொழி, 3:6:1 உரை).

மெய்யனாரும் விரும்பித் தொழுவார்க் கெல்லாம்
பொய்யனாரும் புறமே தொழுவார்க் கெல்லாம்
என்பது திருவாய்மொழி.

இதற்குச் சொற் பொருள் வரைவதனோடு ‘க்ருஷ்ணாச்ரயா ; க்ருஷ்ணபலா ; என்று இருப்பார்க்கு மெய்யனாய் இருக்கும் படைத் துணை வேண்டி வந்த துர்யோதநனுக்கு நராயண கோபாலர்களை அடையக் கொடுத்தானாய், தான் பாண்டவர்களுக்காக நின்று அத்தகைய அழியச்செய்கையாலே பொய்யன் ஆகும்’ என்று பாரத மேற்கோள் விரவி எழுதுவர் ஈட்டுரைகாரர். (திருவாய்மொழி, 9:10:8-36).

‘நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே’ என்னும் பாடலில் ‘ஞாலத்தே’ என்பதற்கு, ‘பரமபதத்திலே (வைகுந்தத்திலே) இருந்து அஸ்த்தாதே பயசங்கை (அஞ்ச வேண்டாததற்கு அஞ்சுதல்) பண்ணுகிறேனோ? ப்ரஹ்மாஸ்த்ர ப்ரயோகம் பண்ணுவார், நாக பாசத்தையிட்டுக் காட்டுவார், அழைத்து வைத்து மல்லரையிட்டு வஞ்சிக்கத் தேடுவார், பொய்யாசநம் இடுவார் ஆகிய தேசத்திலே வர்த்தியா நின்றால் (வாழா நின்றால்) நான் அஞ்சாதே செய்வது என்?’ என்று உரை தீட்டப்பட்டுள்ளது. இதில் முன்னிரு செயல்களும் இராமாயணத்திலும் பின்னிரு செயல்களும் பாரதத்திலும் வருவன என்பது வெளிப்படை.

இவையேயன்றிச் சில இராமாயண பாரதச் செய்யுள்களை மேற்கோள் காட்டி விளக்கிச் செல்வது ஈட்டிலும் பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய் மொழி உரை தவிர்த்த ஏனைய உரையிலும் காணலாம்.

மாணிக்கப் பேழை

இவ் உரைக்காரர்கள் தங்கள் அருளாசிரியன்மாரிடத்து  எல்லையற்ற மதிப்பும் ஈடுபாடும் உடையவர்கள். அவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் நிறைந்த மாணிக்கப் பேழையாகத் தங்கள் உரைகளை அமைத்துள்ளனர். நாதமுனிகள், மணக்கால் நம்பி, ஆளவந்தார், எம்பெருமானார், எம்பார், கூரத்தாழ்வான், பட்டர், பிள்ளை திருநறையூர் அரையர், சிறியாத்தான் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உரைகளில் காணப்படுகின்றன.

நாதமுனிகள், ஒரு நாள் அரசன் ஒருவன் சாமந்தன் (படைத்தலைவன்) தலையிலே அடியையிட்டு யானைக் கழுத்தில் புக்கபடியைக் கண்டு, தேவாதி தேவனாகிய திருமால், பிரமன் முதலானோர் தலையிலே இப்படியல்லவா அடியிட்டுப் பெரிய திருவடியின் மேலே ஏறியருளுகிறான் என்று எண்ணிச் சிந்தை மயங்கினார் என்கிறது ஈடு. (திருவாய்மொழி, 4:4:8-36). இதனால் அவரது உணர்வுமயமான வாழ்க்கையை உணர முடிகிறது. அரண்மனையில் வாழ்ந்த ஆளவந்தாரை மணக்கால் நம்பி எளிதில் சந்திக்க முடியவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் அரண்மனைக்குத் தூதுவளைக் கீரையைக் கொடுத்து வந்து இடையில் நிறுத்திப் பின்னர்க் கொடுத்து அதன் வழியாக ஆளவந்தாரைச் சந்தித்து அவருக்கு மெய்ப் பொருள் விளக்கம் செய்தார் என்றும் குரு பரம்பரைகள் கூறும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், ‘ஆளவந்தார்க்குப் பச்சையிட்ட மணக்கால் நம்பியையும் போலே’ எனவும், இரத்து சொல்லுகைக்கு மணக்கால் நம்பியோடு ஒப்பர் எனவும் வரும் உரைக்குறிப்புகள் அமைந்துள்ளன. (திருவாய்மொழி, 6:8:1-36, 9:3:5-36).

இராமானுசர் நெடிதுநாள் வாழ்ந்தவர் என்பதனை, ‘எம்பெருமானாரைப் போலவே நூறாண்டு ஸ்ரீவைஸ்ணவ ஸ்ரீயோடேயிருந்து’ என்னும் உரைத்தொடர் காட்டுகிறது. (5:1:11-63).

  ‘சிறுவண்டே’ என்னும் சொற்றொடருக்கு, ‘கார்ய வாய்ப்புப் பெருந்து எம்பார் திருமேனி போலே வடிவு சிறுத்திரா நின்றனவாயிற்று’ என்று எழுதப்பட்டுள்ள உரையால் எம்பார் சிறிய வடிவினர் என்பது விளங்குகிறது. (பெரிய திருமொழி, 3:6:2).

மேலும் கூரத்தாழ்வான் பெருங்கல்வி வாய்ந்தவர் என்பதும், (திருமாலை, 6 உரை), பட்டர் அழகிய மணவாளப் பெருமான் என்னும் திருப்பெயரை இனிது நவில்வார் என்பதும்  (திருவாய்மொழி, 6:5:7-36), பிள்ளை திருநறையூர் அரையர் மேன்மைக் குணமுடையார் என்பதும் (திருமாலை,8 உரை), சிறியாத்தான் இரக்கம் மிக்கவர் என்பதும் (பாவை, 1, மூவாயிரப்படி உரை) உரைக் குறிப்புகளால் விளங்குகின்றன.

கற்பனைக் காட்சிகள்

கவியரசர்தம் பாக்கள் படிப்பவர் நெஞ்சிலும் அவர் பெற்ற அனுபவத்தினைத் தோற்றுவிக்க வல்லன. உயர்ந்த கவிஞர்களின் சொற்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தாலும் கவிதை நெஞ்சங்களால் மட்டுமே அச்சொற்களின் வாயிலாகக் கவிஞர்கள் பெற்ற அனுபவங்களையும் கண்ட காட்சிகளையும் உணரவும் காணவும் இயலும். அத்தகைய கவிதை நெஞ்சம் இயல்பாகவே வாய்க்கப் பெற்றவர்கள் இவ் உரைக்காரர்கள்.

இவர்கள் சொற்களில் படிந்து ஆழ்ந்து ஒன்றி நிற்கும் தவத்தால் கண்டறியாதன காணும் பேறுபெற்றனர்.

கண்ணபிரான் வெண்ணெய் திருடி உண்ட செய்தியினை,
தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி- அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன்கிடந்த தானத்தே
ஓராதவன்போல் கிடந்தானை

என்று பாடுகிறது சிறிய திருமடல்.

கண்ணன் வெண்ணெய் களவு கண்டு மோர்க்குடத்தை உருட்டிவிட்டான். யாரேனும் காணப் போகிறார்கள் என்று பதறி விழுந்தான். விழுந்த இடம் முன்பு படுத்த  படுக்கையாயிற்று. களவு கண்டான் என்று சொல்லினும் ‘படுக்கையோடேயே எழுந்திருந்து களவு கண்டது’ என்னும்படி கால்போட்ட இடத்தே கால்போட்டுக் கை போட்ட இடத்தே கைபோட்டுக் கிடந்தான். அப்போது தான் உருட்டிய மோர் படுக்கையிலே வந்து பாய்ந்து நனைக்கச் செய்தேயும் அறியதவனாய்க் கிடக்கிறான். இப்படி அப்பகுதிக்கு ஓவியக் காட்சிபோல் அழகிய உரை வகுத்துள்ளார் பெரிய வாச்சான் பிள்ளை.
இதில் மோர் வந்து பாயை நனைப்பதாகப் பாட்டில் நேரடியாகச் சொல்லப்பட வில்லை. ஆனால் அவர் ‘மோரார் குடமுருட்டி’, ‘ஓராதவன் போல் கிடந்தான்’ ஆகிய சொற்றொடர்களின் துணையால் மோர் வந்து அவன் படுக்கையை நனைக்கும் காட்சியினைக் கற்பனையில் கண்டு உரைக்கிறார்.

‘பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப’ என்று வயல்வளம் பாடுகிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி. (திருப்பாவை,3).

இவ் அழகிய தொடர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உள்ளத்தில் ஆண்வண்டும் பெண் வண்டும் உறங்கி உணர்ந்தெழும் காட்சியினைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. மது அருந்தியதாலும், புல்லிக் கிடந்த கலவியாலும் பிறந்த புகர் முற்றும் வடிவிலே புலப்படுமாறு இருக்கும் வண்டுகள் மிக்க ஆர்வத்தோடு புக்கு மலரின் ஊற்றின் பத்தாலே நஞ்சு உண்டாரைப் போலே கிடந்து உறங்குகின்றன. பின்பு உணர்ந்து எழுந்த போது, ‘என்னை நீ எழுப்பிற்றிலை, என்னை நீ எழுப்பிற்றலை’ என்று ஒன்றுக்கொன்று ‘சீறுபாறு’ என்னா நிற்கின்றன என்று அதனை அவர் சொல் லோவியமாக்கிச் செல்கிறார். இதில் வண்டுகள் படுக்கை வாய்ப்பாலே நெடிது உறங்கிப் பின்னர் விழித்து ஒன்றோடொன்று பிணங்கும் காட்சியினைக் ‘கண்படுப்ப’ என்னும் சொல்வழிக் கண்டுரைக்கிறார்.

இத்தகைய இடங்களில் விளக்கங்கள் நூலற்ற காற்றாடிபோல் மூலத்தினின்றும் விலகி எங்கோ பறப்பது போலத்தோன்றும். ஆனால் உண்மையில், தாயின் மடியிலிருந்து மெல்லக் கீழே இறங்கிக் குழந்தை தெருவில் புழுதியில் விளையாடிய போதிலும் அவள் பார்வை வட்டத்திலிருந்து விலகாமல் இருப்பது போலவே இவ் உரைகளும் மூலத்தின் பொருள் வளாகத்துக்குள்ளேயே அமைகின்றன.

உவமைக் களஞ்சியம்

தம் கருத்தை விளக்குவதற்கு உரைகாரர்கள் எல்லாரும் உவமைகளைக் கையாளுவது பொதுவான இயல்பு. இவ் உரையாசிரியர்கள் விளக்கத்திற்காக மட்டுமின்றி அழகுக்காகவும், சுவைக்காகவும் கூட உவமைகளை இடையிடையே காட்டிச்செல்வர். பெருமிதமான அரசவாழ்க்கை முதல் துள்ளித் திரியும் கன்றுக் குட்டியின் வாழ்க்கை ஈறாகப் பல்வேறு துறைகளினின்றும் உவமைகளைத் தெரிந்தெடுத்துள்ளனர்.

ராஜாக்கள் கறுப்புடுத்து (மாறுவேடமிட்டு) புறப்பட்டால் அந்தரங்கர் (மெய்க் காப்பாளர்) அபேக்ஷித்த தசையில் (வேண்டும்பொழுது) முகங்காட்டுகைக்காக பிரியத் திரிவர். அதுபோல (திருவாய்மொழி, 1:8:9-36),

‘ராஜகுமாரன் புழுகு நெய்யிலே பூவைத் தோய்த்துச் சூடுமாபோல’ (திரு விருத்தம், 40 உரை)

‘கூறு செய்த ஊரிலே கையும் கைத் தளையமாய்த் திரிவாரைப்போல’ (பெரிய திருமொழி, 1:5:8 உரை)

‘வெள்ளத்தைக் கள்ளமடையாலே பள்ளத்தே விடுமாபோலே’ (அமலனாதி பிரான், 1 பெரி.உரை)

‘கர்­கனானவன் (உழவன்) பயிர்த் தலையிலே குடில்கட்டி நோக்குமா போலே’ (பெரிய திருமொழி, 1:2:1 உரை)

‘கிண்ணகத்தில் (வெள்ளத்தில்) இழிவார் கைகோத்துக் கொண்டிழிய ஆள்திரள் பார்த்திருப்பாரைப் போலே’ (பெரிய திருமொழி, 3:1:1 உரை)

‘க்ஷாம காலத்தில் (பஞ்ச காலத்தில்) ப்ரஜைகள் (பிள்ளைகள்) ‘சோறு சோறு’ என்னுமாபோலே’ ( திருவிருத்தம், 69 உரை)

‘வழிபறிக்கும் இடத்தே தப்பிப் போனவன் கிழிச்சீரையை (பணமுடிப்பை) அவிழ்த்துப் பார்த்து இதுதப்பப் பெற்றோமே என்று உசுப்பாரைப் போலே’ (பெரிய திருவந்தாதி, 25 உரை)

‘மாதாப்ரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முகமலர்த்தி காண்கைக்குப் பாங்காகச் சாயுமா போலே’ (திருமாலை, 19 உரை)

‘புதிதாக வைதவ்யம் (கைம்மை) வந்தவர்கள் ஆள் கிளம்புவதற்கு முன்னே மனிதர் முகத்திலே விழியாமே போமா போலே’ (திருவிருத்தம், 24 உரை)

‘பால் குடிக்க நோய் தீருமா போலே’ (பெரிய திருமொழி, 5:8:10 உரை)

‘குழக்கன்று செருக்காலே துள்ளுமா போலே’ (பெரிய திருமொழி, 3:2:7 உரை)

இவை போன்ற நூற்றுக்கணக்கான உவமைகளைக் கையாண்டுள்ளனர். இவை அவர்தம் பரந்த அறிவைக் காட்டுவதோடு அக்காலச் சமுதாய நிலையினைக் காட்டும் பல கணிகளாகவும் திகழ்கின்றன.

இலக்கியத்தேன் துளிகள்

சொல்வதனை அழகுறச் சொல்வது ஒரு தனித்திறன். வைணவ உரை யாசிரியர்கள் சொல்லின்பத்தில் தோய்பவர்கள். அங்கங்கே இருபொருள் தரும் சொற்களைக் கையாண்டு தொடர்களைத் தொடுத்துச் செல்வர். இவ் இரட்டுற மொழிதல் என்னும் உத்தியில் அமைந்த தொடர்களை இலக்கிய இன்பம் நல்கும் தேன் துளிகள் எனலாம்.

பெருமாள் மீது காதல் கொண்ட தலைமகள் உடம்பில் பசலை படர்ந்தது ; கண்களில் நீர் நிறைந்தது. ‘கேழ் அவ் ஒண் கண்ண நீர் கொண்டாள்’ என்கிறாள் திருத்தாயார். இதனை விளக்குமிடத்துத் தலைமகளின் தாய், ‘தாமரையிலே முத்துப் பட்டாற் போலே இக் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிற இருப்பைக் காட்டில் எறித்த நிலவாக்குவதே! இவ் இருப்புக்கு க்ரு´ பண்ணி (முயற்சி செய்து) பல வேளையிலே (பயன் பெறும் நேரத்திலே) இழப்பதே ; பொன்னும் முத்தும் விளையும் படியிறே க்ரு´ பண்ணிற்று’ என்று கூறுவதாக உரை வரையப்பட்டுள்ளது (திருவாய்மொழி, 2:4:10-86). இதில் பொன் என்பது பொன்னாகிய உலோகத்தை யும், பசலை நிறத்தையும், முத்து என்பது முத்தாகிய மணியையும் கண்ணீரையும் குறிக்கும் வகையில் இருபொருள்பட அமைந்திருத்தல் காணலாம்.

பெருமான் தன் கையில் சங்கம் ஏந்தி நிற்கிறான். அதற்குப் பாஞ்சசன்னியம் என்பது பெயர். ‘கூனற் சங்கத் தடக்கையன்’ என்கிறார் நம்மாழ்வார். ‘கூனற் சங்கம்’ என்பதற்கு ‘வாயது கையதாக அநுபவிக்கிறவனே’ என்று இருபொருள் அமைய உரை கூறுகிறது ஈடு (திருவாய்மொழி, 4:5:9‡36). இத் தொடர் முறையே வாயிலும் கையிலுமாக இருப்பவனே என்றும் வாய்ச்சுவையைத் தனதாக்கிச் சுவைப்பவனே என்றும் பொருள் தருகிறது.

இத்தகைய தொடர்களை வடமொழியில் ‘ரசோக்திகள்’ என்பர்.

உணர்ச்சி வெள்ளம்

பாசுரங்களில் தலைமகள், தாயார் கூற்றாகவும், ஆழ்வாரது கூற்றாகவும் வரும் பகுதிகளுக்கு அவர்கள் உள்ளத்து உணர்ச்சியை ஒட்டி விரிவாக வரையும் உரைகள் உணர்ச்சி வெள்ளமாகத் திகழ்கின்றன. வினாக்களின் தொகுதியாக அமைந்து கற்பார்தம் கருத்தினை ஈர்த்து நிற்கின்றன.
சான்றாக, ‘கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்’ என்று தலைமகள் கூற்றாக வரும் திருநெடுந்தாண்டகத் தொடரின் உட்பொதிந்துள்ள உணர்ச்சியினைப் புலப்படுத்தும் பகுதி வருமாறு :

‘பிறரால் வந்த ஆபத்திலோ ரக்ஷிக்கலாவது? உன்னால் வந்த ஆபத்தில் ரக்ஷிக்கலாகாதோ? கல்வர்­த்தில் (கல் மழையில்) அகப்பட்டாரையோ ரக்ஷிக்க லாவது? ... துக்க வர்­த்தில் (துயர மழையில்) அகப்பட்டாரை ரக்ஷிக்கலாகாதோ? ஒரு ஊராக அகப்பட நோவுபட்டாலோ ரக்ஷிக்கலாவது? அவ் ஊராகப் பட்ட நோவை ஒருத்தி பட்டால் ரக்ஷிக்கலாகாதோ? என்னுடைய ரக்ஷணத்துக்கும் மலையை எடுக்கணுமோ? மலையை எடுத்த தோளைக் காட்ட அமையாதோ? என வருதலைக காணலாம் (திருநெடுந்தாண்டகம், 13 உரை).

இவ்வாறே ‘ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தவனே’ என்னும் (திருவெழு கூற்றிருக்கை, அடி 9 உரை) திருவெழுகூற்றி ருக்கைத் தொடருக்கும், ‘மண் கடந்த வண்ண! நின்னை யார் மதிக்க வல்லரே’ (திருச்சந்தவிருத்தம், 27 உரை) என்னும் திருச்சந்த விருத்தத் தொடருக்கும் உணர்ச்சி அலையயறியும் உரைகள் தீட்டப்பட்டுள்ளன.

இவையே யன்றிப் பதசாரம் கூறல், அடைமொழிகளுக்கும் இடைச் சொற் களுக்கும் நுட்பமாக விளக்கம் தருதல் முதலான பல இயல்புகளும் இவ் உரையாசிரியர்களிடம் மேலோங்கி நிற்றலைக் காணலாம். அவை விரிப்பின் பெருகும். சுருங்கச் சொன்னால் வைணவ உரைகள் சில புதிய பெரு வழிகளை உரை கூறும் உலகில் அமைந்துள்ளன எனலாம்.

(இவர் தஞ்சை மாவட்டம் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். குடந்தை அரசினர் கல்லூரியில் இளங்கலையும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலையும் பயின்றவர். 1982 ஆம் ஆண்டு வரை சென்னைக் கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்தவர். இதுபோது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையயழுத்துச் சுவடித் துறையில் அயற்பணி அடிப்படையில் இணைப் பேராசிரிய ராகப் பணிபுரிகிறவர்.  இவரது ‘வைணவ உரை வளம்’ என்னும் ஆய்வேட்டிற்குச் சென்னைப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கியது. பேச்சும் எழுத்தும் இவருக்குப் பிடித்தமான பணிகள். இப்பொழுது திருமங்கை மன்னன் பெரிய திருமொழிக்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிய மணிப்பிரவாள  உரையினைத் தமிழாக்கம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளார்).

No comments:

Post a Comment