Monday, December 30, 2019

ஆறுமுக நாவலரின் கல்விப் பணி

நாவலரின் கல்விப் பணி
(வண்ணை சைவப பிரகாச வித்தியாசாலை 150 ஆம் ஆண்டு விழா மலர்)

கல்விச் சூழ்நிலை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் வருவாயினைப் பெருக்குவதற்கும் செலவினைச் சுருக்குவதற்கும்  வழிகளை வகுத்துச் சிபார்சு செய்வதன் பொருட்டு வில்லியம் கோல்புறூக் (William Coebrooke), கமெறன் (C.H. Cameron)  ஆகிய இருவரைக் கொண்ட கொமிசன் ஒன்றினை ஆட்சியாளர் நிறுவினர். அவ்விரு கொமிசனரும் 1831 ஆம் ஆண்டில் தாம் சமர்ப்பித்த அறிக்கையில் கல்வித்துறையிற் பல மாற்றங்கள் உண்டாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் செய்த சிபார்சுகளில் அரசினர் நடத்தும் தாய்மொழிப பாடசாலைகளை மூட வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

இதன் விளைவாக 1843 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் அரசினர் நடாத்தும் தமிழ்ப் பாடசாலைகள் மூடப்பட்டன. இதன் பயனாக வெசுலியன் மிசனறி, அமெரிக்கன் மிசனறி முதலிய சமய இயக்கத்தினர் நடாத்தும் தமிழ்ப் பாடசாலைகளுக்கே சைவ சமயத்தைச் சார்ந்த பிள்ளைகளுஞ் சென்று படிக்க வேண்டிய இக்கட்டான நிலை நேர்ந்தது. இம்மிசனறிப் பாடசாலைகள் முழுவதும் கிறீஸ்துவ சமயப் பின்னணியில் நடாத்தப்பட்டன. ஒருவர் கிறீஸ்துவ மதத்தைச் சார்ந்திருப்பதே அவர் கல்வி கற்பதற்குரிய முதன்மையான தகுதிப்பாடாக அப்பாடசாலை அதிகாரிகள் கருதினர்.

மேனாட்டுப் பாதிரிமாரும்,  ஈழத்துக் கிறீஸ்தவரும் சேர்ந்து கற்பித்து வந்த இப்பாட சாலைகளில் மாணவர் பலர் காலப்போக்கில் தமது சமயத்தை விட்டுக் கிறீத்துவர் ஆகும் இடர் ஏற்பட்டது. ஆட்சியாளரின் சமயம் என்ற வகையில் கிறீஸ்துவ சமயம் நன்கு வளர்ந்தது. அம்மதத் தொண்டரும் கோவில்களை விடக் கல்விச் சாலைகளை தம் மதத் தொண்டிற்குச் சிறந்த இடமெனத் துணிந்தனர். நாளடைவிற் பாடசாலை களும் பெருகின. உணவு, உடை, நூல், எழுதுங்கருவிகள் முதலியவற்றுடன் இலவசக் கல்வியும் அப்பாடசாலைகளில் வழங்கப்பட்டது. கல்வித்துறையில் மேனாட்டுச் சமய இயக்கங்கள் ஆற்றிய தொண்டு தமிழ் நாட்டுக்கு வந்த சமண, பெளத்தரின் கல்வித் தொண்டினைப் பெரிதும் ஒத்துள்ளது.

ஊணோடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடுமெண்ணும் எழுத்திவை- மாணொடு
கேட்டெழுதி யோதிவாழ்வார்க் கீந்தா ரிம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரித்து (ஏலாதி, 63)

இச் செய்யுளிற் கணிதமேதையார் நன் மாணாக்கர்க்கு வாண், உடை, எழுத்தாணி, புத்தகம் முதலியவை கொடுப்போர் நற்கதி அடைவர் என்று கூறி யுள்ளதை நோக்குக.

கல்விப் பணிகள்

நாவலர் இச்சூழலில் தமது ஆங்கிலக் கல்வியை 1841 ஆம் ஆண்டில் முடித்துக் கொண்டு, இதற்குப் பின் பீற்றர் பேர்சீவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பிப்பதிலும் அவருக்குக் கிறீத்துவ நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் துணையாகினார். தனித்து எண்ணவும் செயலாற்றவும் நாவலர் உரிய வயதை அடைந்ததும் சைவ சமயப் பிள்ளைகள் புறச் சமயச் சார்பான பாடசாலைகளிற் கல்வி பெறுவதால் ஏற்படக் கூடிய தீமைகளை உணர்ந்தார். அச்சூழலை மாற்றத் தலைப்பட்டார். அப்பொழுது அவருக்கு மாத வருவாய் மூன்று பவுண் ஆகும். 1846 ஆம் ஆண்டில் கு. ஆறுமுகஞ் செட்டியார் உதவிய நிலத்திற் பள்ளிக்கூடம் ஒன்றினை எழுப்பு வித்தார். இப்புதுப் பள்ளிக்கூடத்துக்குச் சைவப் பிரகாச வித்தியாசாலை எனப் பெயரிட்டார்1.

This petition was published in the Ceylon Observer of 14th March 1853))

 இப்பெயரே இப்பாடசாலை எழுந்த நன்னோக்கத்தினை விளக்கும். கிறீஸ்தவப் பாடசாலைகள் யாவும் தத்தம் மிசனறிப் பெயரினால் வழங்கின. அவை தம் சமய நோக்கினைப் பெயரளவிலும் உணர்த்தின. நாவலரும் இம்முறையினைத் தழுவித் தம் சமய நோக்கினைப் பெயரளவிலும் உணர்த்தின. நாவலரும் இம்முறையினைத் தழுவித் தம் சமய நோக்கங் கொண்ட கல்வி முறையினை வெளிப்படுத்தினார்.

இந்நோக்கத்திற்கேற்ப நாவலர் தமது சைவப் பிரகாச வித்தியாசாலையில் திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், கொலை மறுத்தல், திருச்செந்தி னிரோட்ட கயமக அந்தாதி, அருணகிரி அந்தாதி, திருவாதவூரர் புராணம் முதலிய சமய நூல்களையும், நாலடியார், திருக்குறள், நீதிநெறி விளக்கம், வாக்குண்டாம், நல்வழி முதலிய நீதி நூல்களையும் பாட நூல்களாக்கினார்2.

நாவலர் வண்ணார்பண்ணையில் 1848 ஆம் ஆண்டில் நிறுவிய சைவப் பிரகாச வித்தியாசாலை பல வழிகளில் ஏனைய தமிழ்ப் பாடசாலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. இவ்வித்தியாசாலையில் ஏழு வகுப்புகள் தொடங்கப் பெற்றன. தரத்தில் மிகக்கூடிய வகுப்பு முதலாம் வகுப்பென்றும், தரத்தில் மிகக் குறைந்த வகுப்பு ஏழாம் வகுப்பு என்றும் வழங்கப்பட்டன.

நாவலர் வெசுலியன் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரான பீற்றர் பேர்சீவல் தூண்டுதலினாற் கீழ்வகுப்புக்களிற் பாடங்கற்பித்தார். இவ்வாறு மேல் வகுப்பு மாணக்கர் கீழ் வகுப்புக்களுக்குப் பாடங் கற்பிக்கும் முறையினை (Monitorial System) டாக்டர். பெல்(Dr. Bell) என்பவர் முதன் முறையாகக் கண்டுபிடித்தார்3.

பாடசாலை ஆசிரியன் வேதனச் செலவினைச் சுருக்குவதற்கு இம்முறை பெரிதும் பயன்பட்டமையால் இதனைப் பல பாடசாலை அதிபர்கள் பின்பற்றினர். நாவலரும் தாம் அடைந்த அனுபவத்தினையயாட்டித் தம் வித்தியாசாலையில் தம்மிடம் ஏற்கனவே கற்ற சதாசிவப் பிள்ளை, சுவாமி நாதயைர், நடராசையர், விசுவநாதையர், ஆறுமுகப் பிள்ளை கந்தசுவாமிப் பிள்ளை, ஆறுமுகச் செட்டியார் ஆகிய எழுவரையும் ஏழு வகுப்புகளில் ஒவ்வொன்றுக்கும் வேதனமின்றி உழைக்கும் ஆசிரியராக நியமித்தார். நாவலர் பாடசாலையினை மேற்பார்வையிடும் மேலதிகாரியாகவும், ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தார்.  பாடசாலையில் மாணாக்கர் கற்பதற்குரிய நூல்கள் யாவும் ஏட்டுச் சுவடியில் இருப்பதனை உணர்ந்தார். ஏட்டுச் சுவடியிலிருந்த பெரிய புராணத்தின் செய்யுட் பொருளினை வசன நடையில் எழுதினார். திருச்செந்தினி ரோட்டக யமக அந்தாதி முதலிய கடின செய்யுட்களின் பொருளினை மாணாக்கர் எளிதில் விளங்கிக் கொள்ளுமாறு அவற்றுக்கு உரை எழுதினார்.  கீழ் வகுப்பு மாணாக்கர் சைவ சமயப் பின்னணியிற் படிப்படியாகத் தமிழறிவு பெற உதவும் பால பாடங்கள் மூன்றினையும் புதிதாக எழுதினார். இவைகளையும் நன்னூல் முதலிய இலக்கண நூல்களையும் அச்சேற்றி மாணாக்கர்க்கு உதவும் பொருட்டு அச்சுப்பொறி ஒன்றினை மானிப்பாய் நன்னித் தம்பி முதலியார் பொருளதவி கொண்டு நிறுவினார். பாடசாலை தொடங்கி மூன்றாண்டுகள் தாம் எழுதிய உரை நூல்களையும், கிடைப்பதற்கருமையாகவிருந்த கொலை மறுத்தல், நன்னூல் முதலியவற்றையும் அச்சிட்டார்4.

பாடசாலையினை நடாத்துவதற்குப் போதிய பணஞ் சேரவில்லை. இலவசமாகக் கல்வி, நூல்கள், உணவு முதலியவற்றினை மாணாக்கருக்கு வழங்குவது என்னும் நோக்கத்தினை நாவலர் வருவாய் குன்றிய காரணத்தினால் நிறைவேற்றாதுவிடவில்லை. மாணாக்கரின் பெற்றோரிடத்தும் உறவினரிடத்தும் பெற்ற பச்சை அரியினைப் பணமாக்கிப் பள்ளிக்கூடத்தினை நடாத்தி வந்தார்5.

தனிப்பட்ட ஒருவர், தமக்கென எந்த நன்மையுங் கருதாது தங்குறிக்கோள் வாழ்க்கையிலே கல்வி நிலையங்களை நிறுவதலே யாமென எண்ணத்திலும், மொழியிலும் செயலிலும் காட்டி வந்ததைப் பொதுமக்கள் பாராட்டினர். ஆனால், அவருக்கு வேண்டிய நேரத்திற் கைகொடுத்துதவப் பின்வாங்கினர். 1852 ஆம் ஆண்டில் நம் பாடசாலைக்கு அளிப்பது போல சேர் வில்லியம் ஆண்டேசன்(Sir William Anderson) என்னுந் தேசாதிபதிக்குக் கற்றோர் உள்ளம் நெகிழக்கூடிய வகையில் விண்ணப்பம் ஒன்றினை எழுதினார்6.

இவ்வாண்டில் இவர் வித்தியாசாலையில் 189 மாணாக்கர் கற்றனர். இவரின் விண்ணப்பத்திற்கு அரசாங்கத்தினர் இரங்கவில்லை. இதற்குக் காரணம் நாவலர் தமது விண்ணப்பத்தில் தற்சமய நோக்கக் கல்வி முறையினை எள்ளளவும் அரசாங்கப் பரிசோதகர், பள்ளிக்கூட கொமிசன் உறுப்பினர்கள் ஆகியோரின் விருப்பத்திற்கிசைய மாற்றியமைக்கத் தயாராயில்லை எனக் குறிப்பிட்டமையே வால்ற்றர் செந்தால் முதலிய கல்வி இயக்குநர்கள் நாவலரின் பாடசாலை நடக்கும் முறையினைத் தம்அறிக்கைகளில் எள்ளி நகையாடிக் குறிப்பிட்டிருந்தனர். அதனால்  நாவலர் உள்ளந் தளரவில்லை. தமது குடும்ப நண்பரும் யாழ்ப்பாண அரசாங்க அதிபருமாகிய றசல் (H.S.O. Russel)என்பவரைத் தம் பள்ளிக்கூடத்தை பார்வையிட்டு அவர் தம் கருத்தினைத் தெரிவிக்குமாறு வேண்டினார்.  இந்நிகழ்ச்சி 1869 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

அப்பொழுது நாவலர் இந்தியாவில் வாழ்ந்து வந்த வராகையால் யாழ்ப்பாணம் கச்சேரியில் பிஸ்கால் கந்தோரில் மொழி பெயர்ப் பாளராய்க் கடமை யாற்றி வந்த திரு. W.  இராமலிங்கம் பிள்ளை என்பவர் வாயிலாக றசல் துரைக்குத் தம் வேண்டுகோளினைத் தெரிவித்தார்.  றசல் துரை அக்காலத்துக் கல்வி இயக்குநராகக் (Director of Public Instruction) கடமையாற்றி வந்த லாறி(J.S. Laurie)  என்பவருடனும் பாட சாலைப் பரிசோதகருடனும் (Inspector of School) நாவலரின் பாடசாலையினைப் பார்வையிட்டார். அப்பாடசாலையில் பாட நூலாக்கப்பட்டிருப்பது பற்றியும் மாணவரது அறிவுக்கூர்மை பற்றியும் நாவலர் தம் பாடசாலையின் இருபதாண்டு வளர்ச்சியைக் குறித்து வெளியிட்ட அறிக்கையில் உணர்த்தப்படும் அந்நோக்கு பற்றியும் வியந்து ஓர் அறிக்கையினை உதவினார்7. அவ்வறிக்கையுடன் கல்வி இயக்குனர் தமது சிபாரிசுக் குறிப்புகளையுஞ் சேர்த்து அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தார். 1870 ஆம் ஆண்டு தொடக்கம் வண்ணார் பண்ணைச் சைவ பிரகாச வித்தியாசாலைக்கு அரசாங்க உதவிப் பணம் அளிக்கப் பட்டது8.

 கல்வி இயக்குநர் லாறி, நாவலர் பாடசாலைக்கு உதவிப்பணம் வழங்குவதற்கு விதித்த நிபந்தனைகள்9 வருமாறு :

1. இப் பாடசாலையை நிறுவியவரின் நோக்கத்துக்கு உரிய மதிப்பு அளிக்கப்படும். பாடசாலையிற் போதிக்கப்படுஞ் சமயக் கல்விக்கு ஊறுவிளைவிக்கப்படமாட்டாது.

2. ஆயினும்  சமயக் கல்விக்குரிய காலம் பரந்து செல்லாமல் குறிப்பிட்ட கால அளவுக்குள் அடங்குதல் வேண்டும். உதாரணமாகக் காலையில் ஒரு மணி நேரத்தில் அக்கல்வியினைப் போதிக்கலாம்.

3.சமயக் கல்வி வகுப்புகள் முடிவடைந்தவுடன் சமயச்சார்பற்ற உலகியற் கல்விக் குரிய வகுப்புகள் நடைபெறுதல் வேண்டும். இவ்வகுப்புகளில் கல்வித் துறையி லிருந்து, கொள்விலைக்குப் பெறக்கூடிய பாடநூல்கள் படிப்பிக்கப்படல் வேண்டும்.

4. பாடசாலை உபயோகத்துக்கென விளக்கப்படங்களும் கரும்பலகைகளும் வழங்கப்படல் வேண்டும்.

1870 ஆம் ஆண்டில் நாவலர் நிறுவிய சைவப் பிரகாச வித்தியாசாலை இரண்டாந்தரப் பாடசாலையாகப் (B Grade) பதிவு செய்யப்பட்டது.

அக்காலத்தில் பரீட்சை முடிபினையயாட்டி உதவிப்பணம் வழங்கும் முறை  (Payment by Results) வழக்கிலிருந்தது. 1870 ஆம் ஆண்டில் இப்பாடசாலை யிலிருந்து 158 மாணவர்கள் சோதிக்கப்பட்டனர். முதலாம் வகுப்பிலுள்ள எழுபத்தொரு மாணாக்கரும், இரண்டாம் வகுப்பிலுள்ள அறுபத்தொரு மாணாக்கரும், மூன்றாம் வகுப்பிலுள்ள இருபத்தாறு மாணக்கரும் வாசித்தல், எழுதுதல், கணக்கு ஆகிய முத்திறப் பரீட்சைகளிற் சித்தியடைந்தனர்.

இவர்கள் ஒவ்வொருவரின் கல்விக்கெனப் பத்துப் பென்ஸ்  (10 Pence)  உதவிப் பணமாக மொத்தம் 48 பவுண் 2 ´ல்லிங்ஸ் 6 பென்ஸ்($48.2sh.6d) வழங்கப்பட்டது. இவ்வாண்டில் இருநூற்றறுபது மாணாக்கர் இப்பாடசாலையிற் பயின்று வந்தனர்10.

1872 ஆம் ஆண்டில் இப்பாடசாலையில் மாணாக்கிகளும் சேர்க்கப்பட்டனர்11.

இவ்வாண்டில் அரசினர் ரூபா 806.25 சதம் உதவிப் பணம் அளித்தனர்12.

1848 ஆம் ஆண்டிலிருந்து 1870 ஆம் ஆண்டு வரையும் நாவலர் இப்பாடசாலையிலுள்ள அரசினர் உதவியின்றிப் பொதுமக்கள் உதவிய அற்ப பொருளுடன் நடாத்திய திறமை வரலாற்று முக்கியத்துவம் உடையது.

நாவலர் என்னும் கல்விமானுக்கு யாதும் ஊராகும். 1864 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்கள் உபகரித்த பொருளுடன் சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியசாலையயான்றை நிறுவினார். கல்வி பற்றி நாவலர் கொண்ட முயற்சிகள், வண்ணார்பண்ணையிலும் சிதம்பரத்திலும் வேதாகம பாடசாலையினையும் மடத்தினையும் நிறுவிச் சைவப் பிரகாசகர்களை உருவாக்க நினைத்தார். இக்குறிக்கோளுடன் 1868, 1870 ஆம் ஆண்டுகளில் பொதுமக்களுக்கும் சிறப்பாகச் சைவ அபிமானிகளுக்கும் பொருளுதவுமாறு விண்ணப்பம் அச்சிட்டு வழங்கினார்13.

சமய சாத்திரக் கல்வி முறையிற் போதிக்கப்படாமலிருந்து வருவதைக் குறித்தே இவ்வாறு வேதாகம பாடசாலையயான்றினை நிறுவ விழைந்தார். அவ்வுத்தமோத்தம தருமத்தின் பொருட்டு எண்பதினாயிரம் ரூபாவினை மக்களிடம் எதிர்பார்த்தார்.  இத்தொகையுடனற்றிச் சேரும் பொருக் கிசைய நடாத்தவும் விரும்பினார். ஆனால் நாவலர் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பொருள் சேரவில்லை. இதனால் அவர் இந்நோக்கத்தினைக் கைவிட நேர்ந்தது.
நாவலர் ‘தமிழ் கற்றலின் கண்ணும் தமிழ்க் கல்வியையும் சைவ சமயத்தையும் வளர்த்தலின் கண்ணும் ஊக்கங் கிளரா வண்ணம் தடைவிளைகின்றதே’ என்று கவலையுற்ற நாட்களோ பல. அவர் ‘தமிழ்க் கல்வியிலும், தமிழ்க் கல்வியையும் சைவ சமயத்தையும் வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளிலும்’ போக்கிய காலத்தினை ‘இங்கிலீ´லே போக்கி உத்தியோகமும் செல்வமும் பெற்று’ வாழ்வதை விரும்ப வில்லை. தமிழ்க்கல்வியும் சைவ சமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய தலந்தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப் பிரசாரஞ் செய் வித்தலுமேயாம் என்பதை நடைமுறையிற் செய்துகாட்ட முனைந்தார்.

1865 ஆம் ஆண்டில் திருவாடுதுறை ஆதினத்து ஸ்ரீ அம்பலவாண தேசிகர் சுப்பிரமணிய தேசிகர் என்னும் உபயகுரு மூர்த்திகள் சிதம்பரத்துக்கு எழுந்தருளினார். நாவலரின் பாடசாலையினைப் பார்வையிடுவதற்கு ஏற்கனவே ஒழுங்குகள் செய்யப் பட்டிருந்தன. நாவலர் அப்பொழுது சென்னையில் இருந்தார். நாவலர் சென்னை யிலிருந்து சிதம்பரத்துக்கு விரைந்து சென்றமை தம் பாடசாலையின் நன்மையைக் கருதியன்று. ‘அவர்களுக்கு வித்தியாசாலையைக் காட்டி அவர்களாலே செயற் பாலனவற்றை வெகுஜன சமூகத்திலே பிரசங்கிக்கின், அவர்கள் இனியாயினும் தங்கள் தலங்களில் இப்படி வித்தியாசாலைகளைத் தாபித்துக் கல்வியறிவொழுக்கங் களையும் சமயத்தையும் வளர்த்தல் கூடுமே என்றெழுந்த பேராசையாலும். நான் சென்னபட்டணத்தை விடுத்தலால் எனக்கு விளையும் நட்டத்தை எட்டுணையேனும் நோக்காது, புறப்பட்டுச் சிதம்பரத்தை அடைந்தேன்’ என்ற கூற்று14 நாவலரின் உயர்ந்த நோக்கத்தினை விளக்கும்.

1871 ஆம் ஆண்டில் வண்ணார் பண்ணையில் யோன் கில்னர்(Rev. John Kilner) என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணவர்கள் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாவலர் அப்பிள்ளைகளின் நன்மையினைக் கருதி ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையினை வண்ணார் பண்ணையில் 1872 ஆம் ஆண்டில் நிறுவினார்.

போதிய பணமில்லாமையாலும் பிள்ளைகள் பலர் சேராமையாலும் இவ் ஆங்கிலப் பாடசாலை நான்காண்டுகளே நடைபெற்றது15. வயது முதிர்ந்தோர் கல்வியையும்(Adult Education) நாவலர் மறந்துவிடவில்லை. நல்லூர்க் கந்தசுவாமி கோவில், வண்ணார் பண்ணைச் சிவன் கோவில், கைலாச பிள்ளையார் கோவில், தில்லைச் சிவன் கோவில் தாம் தாபித்த சைவப் பிரகாச வித்தியாசாலைகள் முதலிய இடங்களில் புராண விரிவுரைகளும் சமயப் பிரசங்கங்களும் நிகழ்த்தி முதியோர்க்கும் கல்வி வளர்ச்சியில் உபகாரியானார். அவரது சமயக் கல்வியறிவு பொது மக்களிடையே பரவியது.

எல்வெற்றியசு (Helvetius)  மத்தியூ அர்னொல்டு(Mathew Arnold) தயானந்தா, அநாகரிக தர்மபாலா முதலிய கல்விச் சீர்திருத்தவாதிகளுக்கு நாவலர் தம் கல்வித் தொண்டில் இணையானவர். கல்வி பற்றி நாவலர் கூறுவனவற்றிற் சிலவற்றினை நோக்கின் இவ்வுண்மை வலியுறும்.

கல்வி பற்றி கருத்துக்கள்

நாவலர், கல்விப் பற்றிக் கொண்ட கருத்துக்கள் யாவை? அவர் சைவ சமயத்தினை வளர்ப்பதற்குத் தமிழ்க்கல்வி ஒரு கருவியயனக் கருதினார். ‘இவை களெல்லாவற்றிற்கும் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்’16, ‘தமிழ் கற்கப் புகுஞ் சைவ சமயிகள் முன்னர் பால பாடங்களைப் படித்துக் கொண்டு...’17 முதலிய கூற்றுக்கள் இதனை வலியுறுத்தும்.

கற்றற்குரிய நூல்கள்

கற்றற்குரிய நூல்களான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை அறிவிக்கும் நூல்களும், அந்நூல்களை அறிதற்குக் கருவிகளாகிய நிகண்டு, இலக்கணம், கணக்கு முதலிய நூல்களுமாம்18.

கல்வியின் பயன்

கல்விக்குப் பயன் அறிவும், அறிவுக்குப் பயன் ஒழுக்கமுமாம்.

கற்றோர் கடமை

கல்வியுடையவர் தாங் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும் நன் மாணாக்கர் களுக்கு கல்வி கற்பித்தலும், எல்லோருக்கும் உறுதியைப் போதித்தலுமாகிய இம் மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கொள்ளல் வேண்டும். இவ்வியல்பு டையவரே கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர்20.

கல்விமுறைகள்

நாவலர் நன்மாணாக்கர் நல்லாசிரியரைத் தேடி அடையும் முறையையும் அவர் வழி ஒழுகி நூல்களை அணுகும் முறையையும்  அவற்றினைக் கற்க வேண்டிய மரபினையும் தாம் வகுத்த கல்வி முறையில் விளக்குகின்றார். ‘இளமையில் கல்’ என்ற ஒளவை வாக்கினை உணர்ந்த நாவலர் இளம் மாணாக்கருக்குத் தம் மூன்றாம் பால பாடத்திற் கற்கும் முறைகள் பற்றிப் போதித்தவற்றுட் பல இக்காலக் கல்வி முறைக்கும் பெரிதும் உகந்தனவாகக் காணப்படுகின்றன. அவை காலங்கடந்தும் கற்கப்படும் என்பதற்கு ஐயம் இல்லை. அவர் வாக்குகள் வருமாறு :

கல்வியை நல்லாசிரியடத்தே சந்தேகமும் விபரீதமும் அறக் கற்றல் வேண்டும்.  கல்வியிலே தேர்ச்சியடைய வேண்டுமாயின் இடைவிடாது கற்றல் வேண்டும். தாங்கேட்ட பாடங்களை நாடோறும் போற்றலும், தாங் கேட்ட பொருட்களைப் பல தரமுஞ் சிந்தித்தலும், ஆசிரியவுரை அடுத்து அவைகளைக் குறைவு தீரக் கேட்டலும், ஒரு சாலை மாணாக்கர் பலருடனும் பல தரமும் பழகுதலும், தாம் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும் அவர் வினவியவைகளுக்கு உத்தரங் கொடுத்தலும், தாம் கேட்டறிந்ததைப் பிறருக்கு அறிவித்தலும் ஆகிய இவைகளெல்லாம் கல்வி பயிலும் மாணாக்கருக்கும் கடன்களாம்.

நூல்களிலே சில நாட் பழகினால், விவேகிகளாயினும், சிலவற்றில் வல்லவராத லும் அரிது. பல நாட் பழகினாலும் மந்தர்களாயினும் பலவற்றில் வல்லவராவார்.

பெரும்பாலும் எல்லாருக்கும் கற்பதிற் கருத்திறங்கும், கற்றதிற் கருத்து இறங்காது. அது நன்மையன்று. கருத்தைக் கற்பதிலே மட்டுப்படுத்தி, கற்றதிலே சிந்தாமல் இறக்கல் வேண்டும்.( கல்வி மூன்றாம் பால பாடம்).

முடிவுரை

நாவலர் காலத்தில் பண்டிதர், வித்துவான் முதலிய பட்டங்களை வழங்கும் பரீட்சைச் சபைகள் இயங்கவில்லை. இந்நிலையினைக் கண்டு நாவலர் ‘தமிழ் கற்றவர்களை நடுவுநிலைமையின் வழுவாது பரீட்சை செய்து, அதில் வல்லவர் களென நன்கு மதிக்கப்பட்டவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும் சின்னமும் கொடுக்கும் சபையார் இக்காலத்தில் இல்லாமையால், தமிழ்க் கல்வியில் வல்லவர் களும் வல்லவர்களல்லாதவர்களும் ஒப்ப மதிக்கப்படுகிறார்கள்’ என வருந்திக் குறிப்பிடுகிறார்21.

‘நீ சமஸ்கிருத பாடம் ஒப்பித்துவிட்டாயா?’ (முதலாம் பால பாடம், 23 ஆம் பாடம்) என்றற்றொடக்கத்து வாக்கியங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, நாவலர் வகுத்த கல்வி முறையை நோக்கில் அறிவியற் கலைகளுக்கு அப் பாடத்திட்டத்தில் இடமிருக்க வில்லையயன்றும், மாணாக்கர் பாடங்களை மனனஞ் செய்து ஒப்பிக்கும் கல்வி முறையே அவர் பாடசாலையில் நிலவியது என்றும் நாவலர் கல்வி கற்பிக்க வகுத்த கல்வி விதிகளிலும் முறைகளிலும் குறைபாடுகளை விட பல நிறைவுகளையே அவர் வகுத்த கல்வித் திட்டத்திற் காண்கிறோம். பல ஆண்டுகளாக மாணாக்கர்க்கு உண்டி, நூல், கல்வி முதலியன வழங்கியும் ஆசிரியர்களை வேதனமின்றிக் கடமையாற்றச் செய்தும், ஊக்கத்துடன் பல நூல்களை அச்சிட்டும், பாட சாலைகளை நிறுவியும் அவற்றினைப் பலவிடங்களில் ஆங்காங்கு நிறுவும்படி பலரைத் தூண்டியும், பாட நூல்களுக்கு உரை, வசனம், சூசனம் ஆகியன எழுதியும், புதிய நூல்களை எழுதியும், பல சமஸ்கிருதத்திலிருந்த சாத்திர நூல்களைத் தமிழிற் சமய வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உபகாரமாகுமாறு எழுதி அச்சிற் பதிப்பித்தும் உழைத்த நாவலரை, நாம் அவர் செய்த பணிகளை நினைவுகூர்ந்தால் மறக்க முடியுமா? ஆகையால் நாவலரின் கல்விப் பணிக்கு ஈடும் எடுப்புமுளதோ?

எல்லாத் தானங்களினும் வித்தியா
தானமே சிறந்தது.
 - நாவலர்

(ச. தனஞ்சயராசசிங்கம் அவர்கள் எழுதிய நாவலர் பணிகள் என்ற நூலிலிருந்து பெறப்பட்டது.)

(1,2,4,5,6 Canther Arumugam’s petition to Sir William Anderson, 11th August, 1852. This pettition was published in the Ceylon Observer of 14th March 1853).
(3 Ranjit Ruberu. T., Education in Colonial Ceylon, Kandy Printers, Kandy, 1962, p.117)
(7.Ceylon Patriot, 13th October, 1870).
(8,10 Report of the Director of  Public Instruction for 1870. Appendix E.11.
Ceylon Administrative Reports, Colombo, 1871)
(9 Jaffna Freeman, April 23, 1869)
(11,12 Report of the Director of Public Instruction for 1872. Ceylon Administrative Reports, Colombo 1873).
13,14 த. கைலாசப் பிள்ளை, ஆறுமுக நாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை,
சென்னப்பட்டணம், காலயுத்தி வரு­ம் தை மீ
(15    அ) Jaffna New, March 1st, 1871
         ஆ) Ceylon Patroit, December 30, 1871
        இ) த. கைலாசப் பிள்ளை, ஆறுமுக நாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை,
சென்னப்பட்டணம், காலயுத்தி வரு­ம் தை மாதம்
16. க. ஆறுமுக நாவலரின் விக்கியாபானம், விபவ ரு­ம் சித்திரை மாதம்
ஆறுமுக நாவலர் சரித்திரம், வித்தியாநுபாலன யந்திரசாலை,
சென்னப்பட்டணம், காலயுத்தி வரு­ம் தை மாதம்
17, 19 தமிழ்ப்புலமை திருக்கோவையர், ஆறுமுக நாவலர் பதிப்பித்தது.
முத்தமிழ் விளக்கவச்சுக் கூடம்
சென்னப்பட்டணம், ரெளத்திரி வரு­ம், ஐப்பசி மீ; அனுபந்தம்
18,20 கல்வி மூன்றாம் பாலபாடம், க. ஆறுமுக நாவலர்.
21.தமிழ்ப்புலமை திருக்கோவையர், ஆறுமுக நாவலர் பதிப்பித்தது.
முத்தமிழ் விளக்கவச்சுக் கூடம்
சென்னப்பட்டணம், ரெளத்திரி வரு­ம், ஐப்பசி மீ; அனுபந்தம்

No comments:

Post a Comment